தாத்தாவைச் சுற்றி சிறுவர்களும், சிறுமிகளும் வட்டம் போட்டு உட்கார்ந்து இருந்தார்கள்.

அதில் இருந்து ஒரு சிறுமி எழுந்து, ” தாத்தா என் பொம்மையை ரகு எடுத்துக் கொண்டு தர மாட்டேன் என்கிறான்” என்று அழுதாள்.

‘ரகு இங்கு வா. அந்த பொம்மையை கொடுத்துவிடு. உனக்கு தாத்தா நல்ல கதை சொல்கிறேன்” என்று அருகில் அமரச் சொன்னார்.
கதை கேட்கும் மகிழ்ச்சியில் பொம்மையை கொடுத்து விட்டான் ரகு.

அப்பளக்குடுமி தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.

” ஒரு ஊரில் கதிரேசன்,கல்யாணி என்று கணவனும்,மனைவியும் இருந்தார்கள்.அவர்களுக்கு ஒருமகன் பிறந்தான்.அவனுக்கு கண்ணாயிரம் என்று பெயர் வைத்து சீராட்டி,தாலாட்டி வளர்த்து வந்தார்கள்.அவனும் வளர்ந்து நான்கு வயதைத் தொட்டுவிட்டான்.ஒரே பையன் என்பதால் கல்யாணி மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தாள்.

ஒரு நாள் அவன் பக்கத்து வீட்டு சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.அந்தப் பெண் குழந்தை ஒரு பொம்மை வைத்திருந்தது.அந்தப் பொம்மை மீது ஆசை வந்தது கண்ணாயிரத்துக்கு.

அந்தச் சிறுமிக்குத் தெரியாமல் பொம்மையை எடுத்துக் கொண்டு வந்து அம்மாவிடம் காண்பித்தான்.

அவன் அம்மாவும் அது தவறு என்று சுற்றிக் காட்டவில்லை.”வைத்து விளையாடு என் தங்கமே” என்று இருந்துவிட்டாள்.

ஐந்து வயது வந்தது கண்ணாயிரத்துக்கு.அவனை பள்ளியில் சேர்த்தார்கள். அவனும் படிக்கச் சென்றான்.

அங்கு பக்கத்தில் அமர்ந்து இருக்கும் மாணவனிடம் உள்ள பென்சிலை எடுத்து வந்து அவன் அம்மாவிடம் காண்பித்தான்.

அப்போதும் அவள் ”தவறு” என்று சுட்டிக் காட்டவில்லை.”வைத்துக்கொள் ,என் ராஜா” என்று சொல்லி முத்தமிட்டாள்.

அம்மா திட்டாததால் அவனும் பென்சில், பேனா,புத்தகம் என எடுக்க ஆரம்பித்து விட்டான். பையன் பெரியவன் ஆகிவிட்டதால் கடைக்கு அனுப்புவாள். கடையில் காசு கொடுத்து பாதியும், திருடி பாதியும் எடுத்து வருவான் கண்ணாயிரம்.
அதற்கு அவள் அம்மா எதுவும் சொல்லாமல் ” என் சமத்து” இவ்வளவு காய்கறிகள் வாங்கி வந்திருக்கிறாயே?” என பாராட்டுவாள்.

கண்ணாயிரம் இப்படி திருட பழகியதால் பள்ளியில் நல்ல பெயர் எடுத்து படிக்க முடியவில்லை. பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு திருட ஆரம்பித்து விட்டான்.
அவன் கொண்டு வரும் நகை,பணம் இவற்றைக் கண்டு மகிழ்ந்தாளே தவிர தவறு என்று அப்போதும் சுட்டிக்காட்டவில்லை அவனது தாய்.

அவன் இப்போது அந்த ஊரிலே பெரிய திருடனாக மாறிவிட்டான். கண்ணாயிரம் என்றாலே ”கண்ணக்கோல்” வைப்பவன் என்று பயப்படும் அளவுக்கு வளர்ந்து விட்டான்.
சில்லரையாக திருடியவன் ஒரு நாள் அந்த ஊர் அரண்மனையிலே திருடப் போய் அங்கு காவலர்களிடம் கையும், களவுமாக மாட்டிக் கொண்டான்.
காவலர்கள் மன்னனிடம் அவனைக் கொண்டு சென்றார்கள்.

மன்னர் அவன் திருட்டுகளைக் கேட்டு அவனுக்கு மக்கள் முன் மரண தண்டனை கொடுக்க வேண்டும்.அப்போது தான் இவன் போல் உள்ள திருடர்கள் பயப்படுவார்கள் என தீர்ப்பு கூறி குறிப்பிட்ட தேதியும் அறிவித்து விட்டார்.
நகர் முழுவதும் திருடனுக்கு தண்டனை கொடுப்பது பற்றி தெரிவிக்கப்பட்டது.

தண்டனை நிறைவேறும் அந்த நாளும் வந்தது.

ஊர்முழுக்க தண்டோரா போட்டு ஊர்மக்களை கூடும்படி மன்னர் உத்தரவு போட்டார்.

எல்லா மக்களும் வந்தார்கள்.அதில் அவன் தாயும் வந்திருந்தாள் வேடிக்கை பார்க்க.

மரண தண்டனை கைதியை கூட்டி வரச் சொல்லி காவலாளிகளுக்கு கட்டளையிட்டார் மன்னர்.

திருடனைப் பார்க்க எல்லா மக்களும் ஆவலுடன் இருந்தார்கள்.கைகளை கட்டி கண்ணாயிரம் கூட்டி வரப்பட்டான்.

அவனைப் பார்த்த கல்யாணி, ”மகனே என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுது”கொண்டு ஓடிவந்தாள்..
அவனைக் கட்டிப்பிடித்து அழுதாள்,”மகனே உனக்கா / இந்த நிலை” என்று வார்த்தைகள் தடுமாற ஒப்பாரி வைத்தாள்.
மன்னர் கண்ணாயிரத்தைப் பார்த்து, ” உனக்கு கடைசியாக ஏதாவது ஆசை இருந்தால் சொல் நிறைவேற்றச் சொல்கிறேன்” என்றார்.

”ஆம் மன்னா / எனக்கு ஒரு ஆசை இருக்கிறது” என்று கண்ணாயிரம் பேச ஆரம்பித்தான்.

”மன்னா நான் சிறுவனாக இருக்கும்போது ஒரு பொம்மையை திருடி என் தாயிடம் காண்பித்தேன். என் தாய் அப்போதே என்னை அடித்து ஏன் எடுத்து வந்தாய், இது தவறு என்று சுட்டிக் காண்பித்து இருந்தால் நான் அடுத்து, அடுத்து திருடி இருக்க மாட்டேன்….
….என்னை கட்டி முத்தமிட்டு பாராட்டியதால் தான் இன்று உங்கள் எல்லோர் முன்பும் பெரிய திருடனாக தலை குனிந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது…

” தன் மகனுக்கு நல்ல பண்புகளையும், பழக்கங்களையும் தாய்தான் எடுத்துச் சொல்ல வேண்டும்.என்னை நல்ல மகனாக வளர்க்க என் தாய்தவறி விட்டாள்….
..எனவே, என் தாயிற்கு என் கண்முன்பே மரண தண்டனை கொடுக்க வேண்டும்.அதைப் பார்த்த பின்பே நான் சாக வேண்டும்.இது தான் என் கடைசி ஆசை என்று கூறினான்.

”எங்கள் இருவர் மரணத்தைப் பார்த்த இந்த ஊர் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க கற்றுக் கொள்வார்கள். நாங்கள் எல்லோருக்கும் பாடமாக இருந்து விட்டுப் போகிறோம்” ,என்று கண்ணாயிரம் சொன்னான்.
மன்னரும் அவன் வேண்டுதல்படி இருவருக்கும் தண்டனை வழங்கினார்.

இதை எல்லாம் கேட்டுக்கொண்டும், பார்த்துக் கொண்டும் இருந்த மக்கள், அவன் தாய் போல் இருக்கக்கூடாது என்ற உறுதியுடன் கலைந்து சென்றனர்.

”இந்தக் கதையைக் கேட்ட நீங்கள் எந்த தவறும் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன்” என்ற தாத்தா இனி நாளை சந்திப்போம் என்று எழுந்து கொண்டார்.

Share.

Leave A Reply