“தாத்தா….தாத்தா இங்கே பாருங்கள். இவன் கடைக்கு போகவில்லை என்று இவனது அம்மா எப்படி அடித்து இருக்கிறார்கள் பாருங்கள் தாத்தா’ என்றனர்.’பாவம் இவன் முதுகு எல்லாம் வீங்கி கிடக்கிறது”என்றான் ஒரு சிறுவன்.
“அப்படியா…..நீ அம்மா சொன்னதை கேட்டிருக்கலாம் இல்லையா? கேட்டிருந்தால் இந்த அடி விழுந்திருக்காது அல்லவா?” என்று அன்புடன் வினவினார் தாத்தா.
“சரி உனக்கு ஒரு கொழுக்கட்டை கதை சொல்கிறேன் கேள்” என்றவர் சொல்ல ஆரம்பித்தார். ஒரு ஊரில் மைதிலி ,முரளி என்ற தம்பதிகள் இருந்தார்கள்.இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று மாதம் தான் ஆனது.
ஒருநாள் மைதிலி தன கணவனிடம்,”எங்க ஊருக்கு போய் அம்மா,அப்பாவை பார்த்து வரலாம்.எனக்கு அவர்கள் நினைவாகவே இருக்கிறது’ என்றாள்.புது மனைவி ஆசைப்பட்டு விட்டாளேஎன்று முரளியும் தன மனைவியை அழைத்துக்கொண்டு மாமனார் ஊருக்குச் சென்றான்.
மகள்,மருமகனைப் பார்த்த மாமனும்,மாமியும் ஆனந்தம் அடைந்தனர்.புது மருமகன் திடுதிப் என வந்து நிற்பதைப் பார்த்து கையும் ஓடவில்லை ,காலும் ஓடவில்லை.என்ன சாப்பிட கொடுப்பது என யோசித்து மாமியார் அரிசியை ஊற வைத்து ஆட்டி கொழுக்கட்டை செய்து சுடச் சுடக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
முரளியும் எடுத்துச் சாப்பிட்டான்.மிகவும் நன்றாக இருந்தது.புது மாப்பிள்ளையாக இருப்பதால் அதிகமாக சாப்பிட வெட்கமாக வேறு இருந்தது.மைதிலியும்,’சும்மா சாப்பிடுங்கள் என எடுத்து வைத்தும் ,எனக்கு போதும் என்று சொல்லி கொஞ்சமாகவே சாப்பிட்டான்”முரளி.இரண்டு நாட்கள் தங்கிவிட்டு வீட்டுக்கு செல்ல கிளம்பினார்கள்.
“வந்த அன்று செய்தார்களே அதன் பெயர் என்ன”என்று மைதிலியிடம் கேட்டான் முரளி.அவளும், “கொழுக்கட்டை”எனபெயர் சொன்னாள்.முரளியின அம்மா,அப்பாசிறு வயதிலேயே இறந்து விட்டார்கள்.எனவே,’கொழுக்கட்டை” எல்லாம் சாப்பிட்டது இல்லை.அதன் ருசி நாக்கில் இன்னும் இருந்தது.
ஊருக்குப் போனவுடன் மனைவியிடம் செய்து தரச் சொல்லவே பெயர் கேட்டான்.அவனுக்கு அடிக்கடி ஞாபக மறதிஏற்படும்.எனவே மனதிற்குள் ‘கொழுக்கட்டை,கொழுக்கட்டை ,என சொல்லிக்கொண்டே வந்தான்.அவர்கள் ஊரை ஒட்டினாற் போல் சின்ன ஓடை ஒன்று உள்ளது.அந்த ஓடையை கடந்தால் வீடு வந்து விடும்,
இருவரும் ஓடைக்கு அருகில் வந்து விட்டார்கள்.”கொழுக்கட்டை, கொழுக்கட்டை”என்று சொல்லிக்கொண்டு வந்தவன் “அத்தரிப்பாச்சா”என்று சொல்லியபடி தாண்டினான்.சற்று நேரத்தில் கொழுக்கட்டையை மறந்து விட்டு “அத்தரிப்பாச்சா”என்று சொல்லிக் கொண்டு வந்தான்.
வீடும் வந்து விட்டது பூட்டைத் திறந்து உள்ளே போனார்களோ இல்லையோ ,எனக்கு “அத்தரிப்பாச்சா’செய்து கொடு என்று மனைவியிடம் கேட்டான் முரளி.”
‘என்னங்க புதுப் பெயராக சொல்லுகிறீர்கள்.இப்படி நான் இது வரை கேள்விப்பட்டதே இல்லையே?” என மைதிலி விழித்தாள்.”உங்க அம்மாவிற்கு செய்ய தெரிந்து இருக்கிறது .நீ தெரிந்து கொள்ளவில்லையா? எனக்கு செய்து கொடு” என பிடிவாதம் செய்தான் முரளி.
‘எனக்கு செய்யதெரியாது “என்றாள் மைதிலி.”எனக்கு செய்து கொடு’என்றான் முரளி.
இப்படியே பேச்சு முற்றி முரளிக்கு கோபம் வந்து, மைதிலியை அடி,அடி என அடித்து விட்டான்.மைதிலி அடியை வாங்கிக்கொண்டு அழுதபடி அப்படியே தூங்கிப் போனாள்.
காலையில் பக்கத்து வீட்டில் உள்ள மாமி இவர்கள் வீடு திறந்து இருந்ததை பார்த்து விட்டு “எப்போ ஊரில் இருந்து வந்தீர்கள் மைதிலி”என கேட்டபடி உள்ளே வந்தாள்.
மைதிலி முகம்,கை,கால் எல்லாம் வீங்கி படுத்திருந்தாள்.”என்ன இப்படி படுத்திருக்கே என்ன உடம்புக்கு?” என விசாரித்தாள்.”ஒன்றும் இல்லை மாமி” என மைதிலி சொல்ல மறுத்தாள்.
உடனே,”முரளி கோபத்துடன் நான் சொல்வதை இவள் கேட்பதே இல்லை மாமி,அதுதான் கோபத்தில் அடித்து விட்டேன்”என்றான்.
“ஏண்டாப்பா கோபம் வந்தா இப்படியா ஆத்துக்காரியை அடிப்பது,’கொழுக்கட்டை, கொழுக்கட்டை’யாய் வீங்கிவிட்டதே என்றாள்.
“மாமி…மாமி இப்ப சொன்னீர்களே அது தான் செய்து கேட்டேன்.அவள் தெரியாது என்கிறாள்’என்றான்.”என்னடாப்பா/ கொழுக்கட்டையா செய்து கேட்டே”என்றாள் மாமி.
ஆமாம்,மாமி….ஆமாம்…என்றான் முரளி.இதைக் கேட்ட மைதிலி,’அடியின்’வேதனையும் மறந்து விழுந்து விழுந்து சிரித்தாள்.மாமியும் சேர்ந்து சிரித்தாள்.
முரளி அசடு வழிய நின்று கொண்டிருந்தான்.பின்பு என்ன மாமி வந்ததால் பிரச்சினை முடிந்தது .கொழுக்கட்டை செய்து கொடுத்தாள்மைதிலி.முரளியும் சந்தோஷமாக ருசித்து தின்றான்.
இதைக்கேட்ட சிறுவர்,சிறுமிகளும் சிரித்தார்கள்.சிரித்துக்கொண்டே விட்டை நோக்கிச் சென்றார்கள்.