தீபாவின் திருமணம் நல்லபடியாக முடிந்தது. மகிழ்வோடு புகுந்த வீட்டினுள்  அடியெடுத்து வைத்தாள். அனைத்தும் புதிதாகப்பட்டது. இரு வீட்டாரிடமும் சம்மதம், சந்தோசம் என்பது ஒருமனதாகவே இருந்தது.
கல்யாணம் முடிந்த கையோடு தன் அப்பாவும் அம்மாவும் தன்னை விட்டு விட்டு அவர்கள் சென்று விட்டனர். இனி இங்கே எப்படி நான் இருக்கப் போகிறேன். யாருடன் பேசுவது ? என்ன பேசுவது ? எங்கே உட்காருவது , எப்படி பழக வேண்டும் என பல கேள்விகள் அவளுள் எழுந்தது.
அப்போது  கையிலிருக்கும் போன்  ஒரு வித உற்சாக ஒலி எழுப்பியவுடன் பேச வெளியே சென்றான் தீபாவின் கணவன் ராகவன். இவள் மட்டும் தனித்தீவில் மாட்டிக்கொண்டது போல் அச்சத்தில் உறைந்திருந்தாள்.
நிச்சயத்திற்குப் பின் ராகவன் மட்டும் தான் தெரிந்தான். அவருடன் மட்டும் தான்  பழகியுள்ளேன். இப்போது அவருடைய குடும்பத்தினருடன் எப்படி பழகுவது. எனது பழக்கங்கள்  அவர்களுக்கு பிடிக்குமா ? ராகவன் எனக்கு மட்டும் தான் சொந்தம்  என நினைத்திருந்தேன். இப்போது அந்த எண்ணமும் தவறானது. எனக்கென்று சொல்லிக்கொள்ள இந்த வீட்டில் …..
போன் பேசி முடித்து விட்டு வந்த ராகவன் தீபா அருகே  அமர்ந்தான்.  தீபா மெதுவாக ராகவனின் காது பக்கத்தில், N’பிளீஸ் என்னை விட்டு எங்கும் போகாதீர்கள். எனக்கு இங்கே தனியா இருக்க ஒரு மாதிரி இருக்கு, பிளீஸ்’  என கெஞ்ச ராகவனும் ,’ சரி நான் எங்கும் போகல, நீ பயப்படாதே , இதெல்லாம் உனக்கு சீக்கிரமே பழகிடும், உன் கூட எப்பவும் நான் இருப்பேன்’ என தைரியம் கூறினான்.

அப்போது உள்ளேயிருந்து ராகவனின் அம்மா கற்பகம் அழைக்க , N’இதோ வர்றேம்மா " என டக்கென எழுந்து உள்ளே சென்று விட்டான் ராகவன்.

தீபாவின்  மனம் தட தட என வேகமாக அடித்துக்கொண்டது. ‘இனிமேல் உன் கூடவே தான் இருப்பேன் எங்கும் போக மாட்டேன்னு வசனமெல்லாம் பேசிவிட்டு அம்மா கூப்பிட்டவுடன் ஒரு வார்த்தை கூட எங்கிட்டே சொல்லாம அடுத்த நொடியே போய்விட்டார். 
இவரை எப்படி நம்புவது. அம்மாவும் பிள்ளையும் அப்படி என்ன  தான் ரகசியம் பேசுவார்களோ  என பல கேள்வியும் குழப்பமும் நிறைந்து ஓடிக்கொண்டிருந்தது தீபாவின் மனசில்……….
அம்மாவிடம் பேசி முடிச்சுட்டு வெளியே வந்த ராகவன் , அவசரமாக செருப்பை மாட்டிக்கொண்டு பைக்கில் வெளியே கிளம்பினான்.தீபாவின் தலையே வெடிப்பது போலிருந்தது. என்னை தனியாக விட்டு விட்டு இவர் மட்டும் தனியாக எங்கு போகிறார். எங்கிட்ட கூட சொல்லாமல்  என தீபா யோசித்துக்கொண்டிருந்தாள்…
அப்போது  கற்பகம் தீபாவின் அருகே சென்று ,’ தீபா இங்கே பாரம்மா நாங்க எல்லோரும் சில நாள் வெளியூர் போக வேண்டியிருக்கு. நீயும்  ராகவனும் வீட்டை பாத்துக்கணும் ‘என சொன்னவுடன் ,தீபா 
‘எதுக்கு அத்தை இப்ப என்ன  திடீர்னு ‘என்று இழுத்தாள்.
‘எல்லா விவரத்தையும் ராகவன் கிட்டே சொல்லியிருக்கேம்மா , அவன் உன்கிட்டே சொல்லுவான். 
‘பஸ் டிக்கெட் எடுக்கத்தான் ராகவன் போயிருக்கான். இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்திருவான் நீ உட்காரம்மா ‘ என தீபாவிடம் சொல்லிவிட்டு ஊருக்கு செல்ல அனைவரும்  தயாராயினர்.
டிக்கெட் எடுத்துக்கொண்டு ராகவன் வந்தவுடன்  இருவரிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டனர். பஸ்சில் ஏறி அமர்ந்ததும்  ராகவனின் தந்தை பழனி கற்பகத்தின் செயலை கண்டு குழப்பமாக இருந்தார். அவளிடமே இது பற்றி கேட்டுவிட வேண்டும் என்று .’ கற்பகம் ஏன் அவசரமாக ஊருக்கு கிளம்பணும். மகனுக்கு கல்யாணமாகி ஒரு வாரம்தான் ஆச்சு , அந்த பொண்ணு நம்பள பத்தி என்ன நினைக்கும் . 
நீ தான்  அந்த பொண்ணை நம்ம பையன்  கல்யாணம் செய்ய முதலிலே சம்மதம் சொன்னே , இப்ப என்ன ஆச்சு உனக்கு ? என்றார்.
‘இல்லங்க தீபாவை பிடிக்காம நாம் ஊருக்கு கிளம்பல, அந்தப் பொண்ணு நம்ம வீட்டுக்கு புதுசு, வந்தவுடனே எல்லாத்தையும் ஏத்துக்கிறது ரொம்ப கஷ்டம். இதுவரைக்கும் அவ அவுங்க வீட்டோட பழக்க வழக்கத்துல வாழ்ந்திருப்பா, இனி இந்த வீட்டோட அவ பழகுறதுக்கு கொஞ்ச நாள் தேவப்படுமுங்க. 
நாம கூட இருந்து சொல்லித் தர்றத விட அந்த பொண்ணே தானே கத்துகிடும் .நம்ம பையன் அவளுக்கு சொல்லித் தருவான். சில விஷயங்களை நமக்கிட்டே கேட்கிறதுக்கு சங்கடமா இருக்கும், அதாங்க. ஆம்பளைங்களுக்கு இது மாதிரியான  அனுபவமெல்லாம்  உணரமாட்டீங்க. நீங்க மாமியார் வீட்டுக்கு ஒரு விருந்தாளியாத்தான்  போவீங்க ….
ஆனா  ஒரு பொண்ணு தன்னோட புகுந்த வீட்ட தன்னோட சொந்த வீடா எப்ப பார்க்கிறாளோ அப்பதாங்க அவ அந்த வீட்டிலே இருக்கிற மத்த உறவையும் தன்னோட சொந்தமா  நினைப்பா. நாம் கூட இருந்து தான் சொல்லித்தரணும் என்று இல்லைங்க, நம்ம வீடு அவளுக்கு எல்லாத்தையும் சொல்லித் தரும். நம்ம வீட்டையும் நம்மளையும் நம்ம மருமக சீக்கிரமாவே தன்னோட சொந்தமா ஏத்துக்குவா, நீங்க பயப்படாதீங்க ‘ என கற்பகம் சொன்னதை கேட்ட பழனிக்கு ஒன்று மட்டும் புரிஞ்சுது , 
‘ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத் தான் தெரியும் ‘ என்று சொன்னது சரியாத்தான் இருக்கு .
ராகவன் அவ்வப்போது  தீபாவின் சந்தேகங்களை  எல்லாம் தீர்த்து வைத்தான். குழப்பமாக இருந்த தீபாவின் மனமும் சிறிது சிறிதாக தெளிவு அடைய தொடங்கியது. எந்தவித பயமும் தயக்கமும் இல்லாமல் அவள் வீட்டோடு உறவாடினாள், எல்லாம் அவளுடைய சொந்தமென அவள் உணர்ந்தாள் .அவளோட புகுந்த வீடு இப்போது அவளுடைய சொந்த வீடாக மாறியது.
‘இங்கே வீடு என்பது சுற்றியுள்ள சுவர்களில்லை .நம்மை சுற்றி வாழும் நம் உறவுகள்” என்னும் உண்மையை உணர்ந்த தீபா மகிழ்ச்சியான அவள் வாழ்க்கையை தன் சொந்தங்களோடு வாழத் தொடங்கினாள்.

Share.

Leave A Reply