கடல் சூழ்ந்த இராமேசுவரத்தில் இராமநாதசுவாமி கோபுரம் கம்பீரமாக அருள் புரிந்து கொண்டிருந்தது. கோவிலைச் சுற்றி கடைகள் ,வீடுகள் நாள்தோறும் வரும் பக்தர்கள் கூட்டம் .
தங்கள் பாவங்களை அக்னி தீர்த்தமாடி ,பர்வதவர்த்தினி அருளால் வேண்டும் வரம் பெற்றுஇன்புற்று திரும்பும் பக்தர்கள் நாள் தோறும் அலைபோல் வந்து கொண்டே இருந்தனர்.
இக்கோவில் பலருக்கு வேலை கொடுக்கும்,வாழ்வு ஆதாரம் .இக்கோவிலை நம்பியே ஊர் மக்களும் வாழ்ந்தார்கள்.


இங்கு மத வேறுபாடு எல்லாம் இல்லை.எல்லோரும் உறவினராய் பழகி பல மொழிபேசி பக்தர்களுக்கு உதவியும், தொழில் செய்தும் வாழ்ந்து வந்தார்கள்.



எல்லோருக்கும் படி அளக்கும் இராமநாதசுவாமி ராக்கு பாட்டிக்கும் அளந்தார். ராக்கு பாட்டிக்கு யாரும் இல்லை. இராமநாதசுவாமி தான்  தனக்கு சொந்தம் என தேங்காய் பழ கொட்டான் முடைந்து  கடையில் கொடுத்து விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் கோவில் கட்டி (யானைக்காக அச்சாக அடித்தது.வசதி இல்லாதவர்களுக்கு குறைந்த  விலையில் கொடுக்கும் உணவு ) வாங்கி சாப்பிட்டு காலத்தை கடத்திக் கொண்டு வந்தாள் ராக்கு.
ஒரு நாள் மணல் மேட்டுப் பக்கம் சிறுமி அழும் சத்தம் கேட்டு போனாள் ராக்கு.
ஒரு சிறுமி மணல் சூடு பொறுக்காமல் காலை தூக்கி ..தூக்கி…மாற்றி வைத்துக் கொண்டு அழுது கொண்டு இருந்தாள். அருகில் போன ராக்கு நிழலான இடத்திற்கு அழைத்து வந்து விசாரித்தாள்.பெயர் அருணா என்றும் பெற்றோர் யார் என தெரியாது என அழுதாள் சிறுமி.
பக்கத்தில் விசாரித்துப் பார்த்தாள் ராக்கு. எதுவும் தெரியவில்லை சிறுமியையைப் பற்றி.
உனக்கு நான் துணையாக இருக்கிறேன். நமக்கு இராமநாதன் துணையா இருப்பான்  என்று பாட்டி தன்னுடனே சிறுமியை வைத்துக் கொண்டாள்.
அருகில் இருந்த பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டாள். எட்டாம் வகுப்பு வரை அருணா நன்றாகப்படித்தாள்.அதற்கு மேல் ராக்கு பாட்டியால் படிக்க வைக்க முடியவில்லை 
வயதிற்கு ஏற்ற  வளர்ச்சியுடன் பார்க்க அழகாக இருந்தாள் அருணா .
பக்கத்து வீட்டில், தனது புடவைக்கு கஞ்சி போட வேண்டும்.அதற்கு சாப்பாடு வடிக்கும் தண்ணீரைத் தாங்கள் என….ஒரு பாத்திரத்தில் வாங்கி வருவாள் அருணா …..
அந்த கஞ்சி தண்ணீரில் கோவில் கட்டியை போட்டு கரைத்து பாட்டியும், பேத்தியும் குடிப்பார்கள்.
கஞ்சி தண்ணீரை வாங்க அந்தப் பெண் கேட்கும் விதம் .”காடி குடித்தாலும் மூடிக் குடிக்கும் பண்பு ”பக்கத்தில் இருந்த ஒரு குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்துப் போனது.
கேசவன் பட்டாளத்தில் வேலை செய்து கொண்டு இருந்தான்.ஒரே மகனாக இருந்தாலும் நாட்டுக்காக தனது வாரிசான கேசவனை இராணுவப் படையில் சேர்த்திருந்தார் ராகவன்.
கேசவனுக்கு ஏற்ற பெண் அருணா என முடிவு செய்தனர்.
நாட்டுப்பற்றும்  மனித நேயமும் உள்ள குடும்பம் என்பதால், அருணாவை கேசவனுக்கு மணம்முடித்ததில் மற்றவர்களுக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை.ஆனந்தம் அடைந்தனர்.
ராக்கு பாட்டி கண்களில் கண்ணீர் மல்க எல்லாம் இராமநாதசாமி ஆசீர்வாதம் என அச்சதை தூவி ஆசீர் வதித்தாள், தன் காலில் விழுந்து வணங்கிய மணமக்களைப் பார்த்து.
Share.

Leave A Reply