
21-குழந்தை வளர்ப்பு இறைவன் படைப்பில் எல்லா குழந்தைகளுக்கும் நல்ல குழந்தைகள் தான். அவர்கள் வளர்க்கப்படும் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் வளர்கிறார்கள்.
சிறிது களிமண்ணை எடுத்து இருவரிடம் கொடுத்து ஏதோ ஒன்று செய்யுங்கள் என்றால்… ஒருவன் பிள்ளையார் செய்கிறான். மற்றொருவன் விளையாட்டு பொருட்கள் செய்கிறான். களிமண் ஒன்றுதான். செய்த விதத்தால் மாறுபடுகிறது.
இதுபோல் தான் குழந்தைகளும், நாம் எவ்வாறு வளர்கிறோமோ அதுபோல் அவர்கள் வளர்வார்கள். எனவே, குறிப்பாக பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் குழந்தை வளர்ப்பு.
சிறுவயதில் குழந்தைகள் குறும்பு செய்யும்போது ரசித்து. தவறு செய்யும் போது கண்டித்து. தெரிய வேண்டிய விபரங்களை சொல்லிக் கொடுத்து. வளர்க்க வேண்டும்.
நாம் சொல்வதை மட்டும் தான் குழந்தைகள் கேட்க வேண்டும் என பெற்றோர் நினைக்கக் கூடாது. அவர்கள் சொல்வதையும் நாம் கேட்க தயாராக இருக்க வேண்டும்.
பருவ வயது வந்தவுடன் நாம் பக்குவமாக பழக வேண்டும். தோளுக்கு மேல் வளர்ந்து விட்டால் தோழன். தோழி, போல் பாவிக்க வேண்டும்.
அதை விடுத்து அவர்களை அடிப்பதும், திட்டுவதுமாக இருந்தால் குடும்பத்தின் மேல் பாசம் வருவதை விட கோபமும், வெறுப்பும் வளர ஆரம்பித்து விடும்.
தவறான பாதைக்கு செல்லவும் வழி பிறக்கும்.
விடலைப் பருவம் என்பது எதையும் சிந்திக்காமல் செயல்பட வைக்கும் பருவம். இந்த பருவத்தில் பெற்றோர் தவறு, குறைகளைப் பக்குவமாக, நட்புடன் இப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே,? என சிந்திக்க வைக்கும் விதத்தில் அன்புடன் எடுத்து சொன்னால் நிச்சயம் கேட்பார்கள். சிந்திக்கவும் செய்வார்கள்.
குழந்தைகள் மேல் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் நமக்கு சுமையாக இருக்கிறார்கள் என்பது போன்ற வார்த்தைகளை சொல்லி திட்டக்கூடாது.
அவர்களிடம் இருந்து எதிர் பார்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டே வளர்க்கக் கூடாது.
சிறுவயதில் இருந்தே இறைவழிபாட்டில் பழக்கப் படுத்தி வளர்க்க வேண்டும். அறிவுபூர்வமான நூல்களை படிக்க பழக்கப்படுத்த வேண்டும்.
விளையாட்டில் எதில் அவர்களுக்கு விருப்பமோ அதை தேர்வு செய்து விளையாட ஊக்கப்படுத்த வேண்டும். படிப்பு மட்டும் இருந்தால் போதும் என நினைக்கக் கூடாது.
வெளியில் சென்று வர அனுமதிக்க வேண்டும். உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்ய வேண்டும். பல இடங்களுக்கு அழைத்து செல்வதால் பலருடைய நடவடிக்கையைப் பார்த்து நல்ல பழக்கங்கள் வர ஏதுவாகும்.
நாம் பலமுறை சொல்வதை விட ஒரு முறை அனுபவப்பட்டால் எளிதில் புரிந்து கொள்வார்கள். பெற்றோருக்கு தெரியாத விபரங்கள் கூட குழந்தைகள் சில சமயங்களில் சொல்லக்கூடும். அந்த சமயத்தில் நாம் பாராட்ட தவறக்கூடாது.
நாம் செய்யும் ஒவ்வொரு செயல்பாட்டையும் மிக நுணுக்கமாக கவனித்துக் கொண்டு, அவர்கள் அப்படியே செய்வார்கள்.
“பெற்றோர் எவ்வழியோ பிள்ளைகளும் அவ்வழியே”
எனவே, நாம் மிகக் கவனமாக இருக்கப் பழக வேண்டும். குழந்தைகளை நல்வழியில் வளர்க்க வேண்டும்.
“வீடு உயரின் நாடு உயரும்” இவ்வாறு வளர்க்கப்படும் குழந்தைகள் வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் நல்ல குழந்தைகள் வளர்ந்து விட்டால்… நம் நாடும் உயரும்.