19-குழந்தை குறும்பு  குறும்பு செய்தால் தான் அவர்கள் குழந்தைகள். குறும்பே செய்யவில்லை என்றால் அவர்களுக்கும், பெரியவர்களுக்கும் என்ன வேறுபாடு?

குழந்தை என்றாலே குறும்பு இருக்க வேண்டும். குறும்பு செய்யும் குழந்தைகள் தான் பிற்காலத்தில் மேதைகளாக ஆகிறார்கள்.

குறும்பு செய்யும் குழந்தைகள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். சுதந்திரமாக இருப்பதால் மன அழுத்தமோ, பயமோ அவர்களை தாக்குவதில்லை.

மேலும், குறும்புகள் செய்யும்போது உடல் மனம் செயல்படுவதால் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். எதையும் எதிர்கொள்ளும் துணிவும் வந்து விடுகிறது.

“கரும்பு இனிக்கும் ரசித்தால் குறும்பும் இனிக்கும்”

குறும்பு செய்யாதே,குறும்பு செய்யாதே… என அடக்கி வைக்கும் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு  உட்படுகிறார்கள்.

இங்கேயே இருக்க வேண்டும். இதை செய்யக்கூடாது, அதை செய்யக்கூடாது என அடக்கும் முறையால் அடக்கும் குழந்தைகள். சுயமாக எதையும் செயல்பட பயந்து அப்படியே உட்கார்ந்தால் உட்கார்ந்த இடம். சென்றால் சென்ற இடம் என இயங்கும் இயந்திரமாக இயங்க ஆரம்பித்து விடுவார்கள்.

இப்படிப்பட்ட குழந்தைகள் பெற்றோர் தங்கள் குழந்தை தங்கள் பேச்சை மீறுவதில்லை. இரு என்றால் அப்படியே இருப்பான். என பெருமை பேசுவார்கள். ஆனால்,

எதிர்காலத்தில் இப்படிப்பட்ட குழந்தைகள் தான் தீவிரவாதம், சமுதாய சீர்கேடுகள் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அடக்கு முறையை விரும்பாமையே இதற்கு காரணம்.

இவற்றை எல்லாம் பெற்றோர் மனதில் கொண்டு குழந்தைகளிடம் அன்பு பாராட்டி குழந்தைகள் செய்யும் குறும்புகளை ரசித்து அவர்களை உற்சாகப்படுத்தி மகிழ பழகிவிட்டால்…

வீட்டில் ஒரு நல்ல குழந்தையும், நாட்டிற்கு ஒரு நல்ல குடிமகன் அல்லது குடிமகள் கிடைப்பார்கள். என்பதில் ஐயமில்லை.

பால் கொடுக்கும்போது சிறு சிறு குழந்தைகள் பாடல்களை பாடிக் கட்டும் போது அவர்களுக்கு கவனிக்கும் ஆற்றல் பெருக்குகிறது.

உணவு ஊட்டும் போது சிறு சிறு நீதி கதைகள் சொல்லும்போது இது போல நல்ல நெறியில் வாழ வேண்டும் என்ற எண்ணம் பதிவாகி விடுகிறது.

மூளைக்கு வேலை தரும் விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தந்து விளையாட கற்றுக் கொடுக்க வேண்டும்.

இறைவனை வழிபட கற்றுக் கொடுக்க வேண்டும். அச்சமயத்தில் அமைதியாக இருக்கும்படி செய்து பழக்க வேண்டும்.

மனதை ஒருமுகப்படுத்த எளிய முறையாகும். இத்தியானப்  பயிற்சியால் உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.

அன்பால் எதையும் சாதிக்கலாம். குழந்தைகளிடம் அன்பைக் கொடுங்கள். குறும்பை ரசியுங்கள். உடல் வளர்ச்சியும், உள்ள வளர்ச்சியும் பெற்றால் தான் முழு வளர்ச்சி பெற முடியும்.

பாசத்தையும்,சமுதாய நேசத்தையும் ஊட்டி வளர்க்க வேண்டும். அப்படி வளர்த்தால் பொறுப்புள்ள குழந்தைகளாக வளர்வார்கள்.

அன்பை மறைக்கவும் கூடாது. பாராட்டை குறைக்கவும் கூடாது. குழந்தையின் ஒவ்வொரு செயலையும் நன்றாக கவனிக்க வேண்டும். அவற்றில் உள்ள நிறை,குறைகளை விளக்கி கூற வேண்டும்.

குறைகளை சுட்டிக் காட்டுவது போல், நிறைவாகச் செய்யும் போது பாராட்ட வேண்டும். குழந்தை தானே என்று அலட்சியம் கூடாது.

நாம் எப்படி குழந்தைகளை கவனிக்கிறோமோ அதுபோல குழந்தைகளும் நம்மை கவனிப்பார்கள். என்பதை பெற்றோர் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சுயநலவாதிகளாக வளரும் குழந்தைகளுக்கு சமூக அக்கறையும், அங்கீகாரமும் இருக்காது. இக் குழந்தைகளுக்கு மன வளர்ச்சியும், மகிழ்ச்சியும் குறைவாகவே இருக்கும்.

பெற்றோர் முழு பாதுகாப்பு கொடுக்கிறார்கள். நமது பேச்சுக்கு அங்கீகாரம் தருகிறார்கள். என்று குழந்தை நினைக்கும் போது தவறுகள் தடுக்கப்படுகின்றன.

பெற்றோர் பொறுப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும். நட்பையும், உறவையும் பேணிக் காப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது குழந்தைகள் சிரமம் இன்றி எல்லோரையும் நேசிப்பவர்களாக வளருவார்கள்.

குழந்தைகள் வளர… வளர சிறு சிறு வேலைகளைக் கொடுத்து உழைப்பின் உண்மையை தெரியப்படுத்த வேண்டும்.

சிறு பொறுப்புக்களை கொடுத்து செயல்பட வைக்க வேண்டும். சிந்தனையும், செயலும் செயல்படும் போது மனமகிழ்ச்சி தானே வரும்.

Share.

Leave A Reply