மகத்துவம் வாய்ந்த மனிதப்பிறவியில் முதன்மை பெறுகிறவர்கள் பெண்கள் தான்.இந்த உலக இயக்கத்தில் பலவகையில் ஆதாரா சிருஷ்டியாக பெண்கள் தான் உள்ளனர். அவர்கள் பலவிதமான அவதாரங்களில் உலாவருகின்றனர். தாயாக இருந்து இந்த உலகம் உயிர்ப்பெற உதவுகின்றனர்.மனைவியாக இருந்து சுக துக்கங்களில் பங்கு கொள்கின்றனர் .மகளாக இருந்து பலவித ரூபங்களில் உறுதுணையாக விளங்குகிறார்கள்.
பெண்கள் அன்று முதல் இன்று வரை பல்வேறு துறைகளிலும் சாதனைகள் நிகழ்த்தி வருகிறார்கள்.பண்டைய காலங்களில் இலக்கியத்திற்கும்,வீரத்திற்கு ம் அரசியல் விவேகத்திற்கும் உதாரணமாக,முன்னோடியாக பலர் திகழ்ந்து உள்ளனர்.ஔவையார்,காரைக்கால் அம்மையார் ,ஜான்சி ராணி,மங்கம்மாள்,வேலுநாச்சியார் போன்றவர்கள் இன்றும் போற்றுதலுக்குரியவர்களாகவே உள்ளனர்.
இன்றைய நவீன காலத்தில் பெண்கள் அரசியல்,கலை, இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி தங்களது வெற்றியை நிலை நிறுத்தி வருகின்றனர்.அதே போல் பல ஆண்களின் செயல்பாட்டுக்கு இன்றும் உறுதுணையாக இருந்து அவர்களை இயக்கச் செய்து வெற்றிகளை குவிக்கச் செய்கிறார்கள்.
அப்படிப்பட்ட சூழ் நிலையில் கடந்த சில மாதங்களாக இளம் பெண்கள் பல்வேறுபிரச்சினைகளுக்கு ஆட்பட்டு இன்னுயிரை மாய்த்துக்கொண்ட பல செய்திகள் வெளிவந்துள்ளன. இளம் பெண்கள் நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.எதையும் எதிர்நோக்கும் சக்தி கொள்ள வேண்டும்.
தங்களுக்கு முந்திய சாதனைப் பெண்களின் வரலாறுகளை நிச்சயம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அந்நிய ஆதிக்கம் செலுத்திய காலங்களில் கூட தங்களை துன்புறுத்தியவர்களிடம் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.’புலியை முறத்தால் அடித்து விரட்டி வெற்றி ‘கொண்ட பெண்கள் வாழ்ந்த இந்த நாட்டில் அவர்கள் வழித் தோன்றல்களாக நீங்கள் இருக்கிறீர்கள்.
எனவே எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அதை துணிவுடன் எதிர் கொண்டு வெற்றி பெறவேண்டும்,அதற்காக அற்புதமான பெறற்கு அரிதான இந்த பிறவியை மாய்த்துக்கொள்வது தவறு. உலக மகளிர் தினமான இந்த மாதத்தில் மகளிர் தங்களை உயர்த்திக் கொள்ள ,எதிர்ப்பவரை எதிலும் வெற்றி கொள்ள, சபதம் ஏற்க வேண்டும்.
பொதுவாக பெண்கள் எப்போதும் கூர்மையான கத்தியின் முனையை கையில் வைத்திருப்பது போன்ற உணர்வுடன் தங்களது சுதந்திரத்தையும்,உரிமையையும் பார்க்கவேண்டும். அந்த கூர்முனையே அவர்களை பதம் பார்க்க இடம் கொடுக்கக் கூடாது.இதை என்றும் மனதில் கொள்ளவேண்டும்.
அருமையான பூஞ்சோலையில் மரங்கள் மட்டும் அணிவகுத்து நின்று பயனில்லை. அழகிய மலர்கள் வேண்டும், மணக்கும் நறுமணம் வேண்டும்,வானவில்லை ஒத்த கண்கவரும் நிறங்கள் வேண்டும் இவைகளை தரக்கூடிய பெண்களை ஆண்கள் போற்றவேண்டும்,பாதுகாக்க வேண்டும்,உற்றதுணையாக இருந்து அவர்களதுசெயல்களை ஊக்குவிக்க வேண்டும் ஆண்கள் இவற்றை வருங்காலத்தில் இன்னும் சிறப்பாக செய்வார்கள் என்று நம்புகிறோம்.உலக மகளிர் தின வாழ்த்துக்களை மகளிர் அனைவருக்கும் எங்கள் ‘ஸ்ரீ ஐசுவரியம்’சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.