தமிழர்களின் வீரத்திற்கும் , பாரம் பரியத்திற்கும் நாடெங்கும் தலைநிமிரச் செய்த -செய்கின்ற ஒரு விழாவாக ஜல்லிக்கட்டு திகழ்ந்து வருகிறது என்றால் அது மிகையில்லை .
கடந்த ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில் மட்டுமே மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடிக்கொண்டிருந்த இந்த ஜல்லிக்கட்டு விழா இப்போது நகரப் பகுதிகளிலும் விளையாட வேண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை வேட்கையை கிளப்பி இருக்கிறது என்றால் அது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதுதான்.
நாம் எல்லோரும் கிராமங்களில் இருந்து பல்வேறு காரணங்களால் நகரங்களில் குடியேறியவர்கள் தான். நமது வருகையால் கிராமம் பெரிய நகரமாக உருவெடுத்து உள்ளது.
ஆனால் கிராம விளையாட்டுக்களை நாம் நகரங்களில் கொண்டாட முடிவதில்லை அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு மேல் ஒரு அழுத்தத்தை கொடுத்து அதை அமுக்கி விடலாம் என்று எண்ணம் ஏற்பட்டது தான் அது அடக்குமுறையில் இருந்து மீண்டும் வீறுகொண்டு எழுந்து இப்போது எல்லோர் மனதிலும் நிறைந்து விட்டது.
இதன் எழுச்சியாக கோவையில் 39 ஆண்டுகளுக்குப்பின் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்தப்போட்டிக்காக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் பல்வேறு ஊர்களில் இருந்து மாடுகளும் , மாடுபிடி வீரர்களும் அழைத்து வரப்பட்டனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்க கோவை மற்றும்பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பார்வையிட்டது வரவேற்க தகுந்த ஒன்றாகும்.

ஜல்லிக்கட்டு நமது தமிழர் உணர்களில் மக்களின் நாடி-நரம்புகளில் ஊறிப்போன ஒன்றாகும். இந்த விளையாட்டை இனி ஆண்டுதோறும் எல்லா மாவட்டங்களிலும் நடத்தவேண்டும்.
இதற்காக தமிழக அரசு தனியாக ஜல்லிக்கட்டு -என்கிற மஞ்சு விரட்டு விளையாட்டை நடத்த தனியாக களம் அமைக்க வேண்டும். நாட்டில் நடைபெறும் ஒரு சிலர் மட்டும் விளயாடும் விளையாட்டுக்கு கோடிக்கணக்கில் செலவழித்து களம் அமைத்து , பயிற்சி கொடுத்து நடத்தும் அரசு இது போன்ற நூற்றுக் கணக்கானோர் பங்கேற்கும் விளையாட்டுக்கு இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க , நிரந்தர திடல் அமைக்க முன் வரவேண்டும்.
அதன் மூலம் வீரமும், தீரமும் உள்ள இளைஞர்கள் உருவாவார்கள். ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு இன்னும் நிறைய அமைப்புகள் பரிசுகளை வாரிவழங்கி இளம்காளைகளின் ஆர்வத்தை தூண்டுச் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் மாவட்டம் தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று எதிர்பார்ப்போம் .