இன்று வீட்டில் பொருளாதார நிலை கட்டுக்குள் அடங்காமல் நிலை குலைந்து போகக் காரணம் மருத்துவச் செலவுகளும் ஒன்று என்று சொல்லத்தான் வேண்டும் இயற்கைக்கு மாறாக நடக்கும் போது எல்லாம் இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாக தவறியதே இல்லை.
இன்று பெண்கள் வலிவந்து குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. இயற்கையாக நடப்பதற்குக் கூட பொறுமை இன்றி கர்ப்பப் பையை எடுத்து விடுகிறார்கள். எல்லாம் அவசரம் எதற்காக இந்த ஓட்டம்.
ஒரு நிமிடம் சிந்திப்போம்.சந்தோசத்தை தொலைத்து எதைப் பெறப்போகிறோம் .மருந்து வேண்டாம் மாத்திரை வேண்டாம். வீட்டில் இருக்கும் உணவில் உள்ள மருத்துவக் குணத்தை தெரிந்து கொண்டு உண்டாலே போதும்.
வைத்தியருக்கு கொடுப்பதை வணிகருக்கு கொடு—என்பார்கள் நம் முன்னோர்கள் வணிகப் பொருளை வைத்தியம் ஆக்கிய விதத்தைப் பார்ப்போமா.
அதற்கு முன் சில மருத்துவ பாடல்களைப் பார்ப்போம்.
“வாழ்வதற்காகச் சாப்பிடுங்கள்
சாப்பிடுவதற்காக வாழ வேண்டாம்”
“உடலுக்கு அழகு உழைப்பு
உள்ளத்திற்கு அழகு நல்லுணர்வு”
“தவறான ஆசைகள் நோயிற்கு காரணம்
ஒழுங்கான வாழ்வே ஆரோக்கியம்”
நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் ‘ —பழமொழி.
“உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது”–முதுமொழிக் காஞ்சியில் கூடலூர் கிழார் கூறுகிறார்.
“இழிவு அறிந் துண்பான்கன் இன்பம் போல் நிற்கும்
கழிபேர் இரையாண்கண் நோய் ”
சிற்றுண்டி, பேருண்டிகளை அடிக்கடி விரும்பி உண்பவர்க்கு நீரிழிவு போன்ற தீராத நோய்கள் எளிதில் வரும் என்கிறார்.
“மீ தூண் விரும்பேல்”
‘”நுண்மை நுகரேல் ”
“நோய்க்கு இடம் கொடேல்” என்று ஆத்திச் சூடி யில் ஒளவையார் கூறியுள்ளார்.
வடை, முறுக்கு போன்ற திண்பண்டங்களை விரும்பி அடிக்கடி உண்ணும் போது நோயுண்டாகும். அளவு அறிந்து உண்ணும் போது நோய்க்கு இடம் கொடுக்க அவசியம் இல்லை.எனவே,அதிகம் உணவை உண்டு அவதிப்படாமல் அளவுடன் உண்டு நோய்க்கு இடம் கொடுக்காமல் வாழச் சொல்கிறார் ஒளவையார்.
மேலும், குழந்தைகள் உண்டபின் வைப்பது, மீதியாகி வீணாகக் கூடாதே என்று சாப்பிடுவது இப்படி பல காரணங்களினால் பெண்கள் உணவு வகைகளை தேவை இல்லாமல் சாப்பிட நேரிடும்.
அதனால் உடல் பருத்து அழகு கெட்டு காட்சி தருவார்கள். உடல் அழகை பேணி காக்க வேண்டும் என்று எண்ணிய ஒளவையார்
“உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு”
“பாலோடு ஆயினும் காலம் அறிந்து உ ண் “– என்று கொன்றை வேந்தனில் கூறுகிறார்.ஒளவையார்.
“அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து”.
காலம் அறிந்து அளவோடு பசித்த பின் உணவு உண்டு வந்தால் மருந்தின்றி நீண்ட நாள் வாழலாம் என்று வள்ளுவரும் கூறியுள்ளார்.
இதே கருத்தை தேரையார் வாகடம் என்னும் நூலில்
“மூலஞ்சேர் கறி நுகரோம் மூத்தயி ருண்போம்
முன்னைநாள் செய்தகறி அமுதெனும் அருந்தோம்
ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம்
நமனார்க்கிங் கேது சுவை நாமிருக்கு மிடத்தே” -என்று கூறியுள்ளார்.