என்னுயிர் தமிழ்த் தாயே உன்னில் நானும் ஒரு அணு தமிழனாய் பிறந்ததால் உன்னில் நானும் ஒரு அணு

நான் பிறந்த போது
என்னில் நோய் எதுவும் தாக்கி விடாமல் இருக்க
தடுப்பு மருந்து
தந்தார்கள்.

ஆனால்
பிற மொழி
ஏதும் தாக்காமல் இருக்க எதுவும் தரவில்லை

பிறமொழி நோய்
வந்து அணு அணுவாய் துருப்பிடித்துத்
தானே
உருவில்லாமல்
அழிந்து கொண்டிருக்கிறது

அது இந்த
அணுவிலும் நுழைந்தது தமிழே நானும்
தமிழனாய்
பிறந்த போதிலும்

என்னைச் சுற்றி
எல்லாம் பிற
மொழிதான் இருக்கிறது

புலமை செழிக்கும்
பழமை மொழி
என்று தான்
எனக்கு அறிமுகம்

ஆனது என்
தாய்மொழி…

எதுகை மோனை
கவிதை நிறைந்த
என் தமிழ் மொழி

இன்று கொச்சை நிறைந்த பச்சை மொழியாய் தான் பார்க்க முடிகிறது

காதல் நிறைந்த
சண்டை மொழியாய் தான் பார்க்கப் படுகிறது

உலகை வென்ற ராஜமொழி இன்று வேலைக்காரி பேசும் கூலிக்கார மொழியாய் தான் மாறிக்கொண்டு இருக்கிறது

மனம் மகிழ்ந்து
இறை உருகும் என் மொழி இன்று அகம் கசந்து
முகம் சுழிக்கப்படுகிறதே

இதுவரை என்னால்
தமிழன் என்று
சொல்லிக் கொள்ள
எனக்கு சந்தர்ப்பமே கிடைக்கவில்லை

இந்த சமுதாயம்
எனக்கு அப்படி ஒரு சந்தர்ப்பமும் தரவில்லை

பள்ளியில் நான்கு
மொழிகள் கற்கிறேன் வீட்டினில் நான்கு
வேதங்கள் கற்கிறேன்

வீதியில் நாலும் கற்கிறேன் நான்கு தமிழ்ச் சொற்கள்

என்னால் கற்க முடியவில்லை எனக்குள்
இருக்கும் தமிழன்
எங்கே தெரியவில்லை

நான் தமிழ் புத்தகம்
படிப்பதில் என் பெற்றோருக்கு விருப்பம் இல்லை

நான் தமிழ் பேசுவதற்கு பள்ளியில் அனுமதியில்லை வீதியில் பேசினாலும்
யாரும் கேட்பதில்லை

தமிழ் கற்க ஆசைப்படும்
தமிழ் குழந்தை நான்

என் தமிழர்களே
என்னைப் போல சிதைந்து கொண்டு இருக்கும்
தமிழ் அணுக்களை
சீர்திருத்த
ஏதேனும்
மருந்து இருந்தால்
கண்டு பிடியுங்கள்.

இனி பிறக்கும் தமிழ் குழந்தைகளுக்குச்
சொட்டு மருந்தோடு
அதையும் சேர்த்துக் கொடுங்கள்
தமிழ் வாழட்டும்.

Share.

Leave A Reply