ஒற்றையடிப் பாதையிலே

நடந்து வரும் அந்த சுகம்

நூறடி சாலையின் நெரிசலில்

கிடைத்திடுமோ ?

பச்சை மரத்தடியில்

படுத்துறங்கும் அந்த சுகம்

மின் விளக்கு கம்பத்தடியில்

எங்கேனும் கிடைத்திடுமோ  ?



மண்வாசனை மழையோடு

நனைந்து வரும் அந்த சுகம்

நகரத்து வீதியினில்

கிடைத்திடுமோ ?

சுத்தமான சுகக் காற்று

சுவாசிக்கும் அந்த சுகம்

வாகனப் புகை தாண்டி

நமக்கென்று கிடைத்திடுமோ ?              


ஊரே உறவென்று

வாழுகின்ற அந்த சுகம்

உறவே பகைபோல

இங்கிருக்க கிடைத்திடுமோ ?

மண்ணோடு விளையாடி

உறவாடும் அந்த சுகம்

பணம் கொண்ட

நகரத்தில் கிடைத்திடுமோ ?  

குளத்தில் கூட்டாக

குளிக்கும் அந்த சுகம்

நகரத்து  நீச்சல் குளம்  

எந்நாளும் தந்திடுமோ ?

அரட்டை அடிக்கின்ற

இரவுநேரத் திண்ணை  சுகம்

அடுக்குமாடிக் குடியிருப்பின்

இறுக்கத்தில் கிடைத்திடுமோ ?

பெளர்ணமி முழுநிலவின்

வெளிச்சத்தைக் கண்ட சுகம்

கண்பறிக்கும் மின் விளக்கின்

வெளிச்சத்தில் கிடைத்திடுமோ ?

தாவணிப் பெண் சிணுங்கி

வெட்கப்படும் அந்த சுகம்

சுடிதார்  உடையணியும்

பெண்ணிடம் கிடைத்திடுமோ ?

வயது போனபின் கூட

கிராமம் தரும் அந்த சுகம்

வசதி உள்ள இந்நகரம்    

எந்நாளும் தந்திடுமோ ?

எல்லாமும் அனுபவித்து

இறந்தாலும் அந்த சுகம்

நகரத்து வாழ்க்கையில்

எந்நாளும் கிடைத்திடுமோ ?

Share.

Leave A Reply