ஒற்றையடிப் பாதையிலே
நடந்து வரும் அந்த சுகம்
நூறடி சாலையின் நெரிசலில்
கிடைத்திடுமோ ?
பச்சை மரத்தடியில்
படுத்துறங்கும் அந்த சுகம்
மின் விளக்கு கம்பத்தடியில்
எங்கேனும் கிடைத்திடுமோ ?
மண்வாசனை மழையோடு
நனைந்து வரும் அந்த சுகம்
நகரத்து வீதியினில்
கிடைத்திடுமோ ?
சுத்தமான சுகக் காற்று
சுவாசிக்கும் அந்த சுகம்
வாகனப் புகை தாண்டி
நமக்கென்று கிடைத்திடுமோ ?
ஊரே உறவென்று
வாழுகின்ற அந்த சுகம்
உறவே பகைபோல
இங்கிருக்க கிடைத்திடுமோ ?
மண்ணோடு விளையாடி
உறவாடும் அந்த சுகம்
பணம் கொண்ட
நகரத்தில் கிடைத்திடுமோ ?
குளத்தில் கூட்டாக
குளிக்கும் அந்த சுகம்
நகரத்து நீச்சல் குளம்
எந்நாளும் தந்திடுமோ ?
அரட்டை அடிக்கின்ற
இரவுநேரத் திண்ணை சுகம்
அடுக்குமாடிக் குடியிருப்பின்
இறுக்கத்தில் கிடைத்திடுமோ ?
பெளர்ணமி முழுநிலவின்
வெளிச்சத்தைக் கண்ட சுகம்
கண்பறிக்கும் மின் விளக்கின்
வெளிச்சத்தில் கிடைத்திடுமோ ?
தாவணிப் பெண் சிணுங்கி
வெட்கப்படும் அந்த சுகம்
சுடிதார் உடையணியும்
பெண்ணிடம் கிடைத்திடுமோ ?
வயது போனபின் கூட
கிராமம் தரும் அந்த சுகம்
வசதி உள்ள இந்நகரம்
எந்நாளும் தந்திடுமோ ?
எல்லாமும் அனுபவித்து
இறந்தாலும் அந்த சுகம்
நகரத்து வாழ்க்கையில்
எந்நாளும் கிடைத்திடுமோ ?