குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும். குன்று போல் உயர்ந்த எண்ணங்களைக் கொடுக்க வல்லவன் குமரக்கடவுள்.

கடல் போல் கருணையை வாரி வழங்குபவன் திருச்செந்தூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி. பகைவருக்கும் கருணை காட்டியவன் பாலசுப்பிரமணியன்.

ஆண்டவனின் அவதாரங்கள் எல்லாம் தீயவர்களை அழிப்பதற்காகவே எடுக்கப்பட்டது.
ராமன்- ராவணனையும்
நரசிம்மன்- இரணியையும்
கிருஷ்ணன்- கம்சனையும் அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

ஆனால், சூரனை அழிப்பதற்காக அவதரித்த முருகன். சூரனோடு போரிட்டு, முருகனின் வேல் அவன் மேல் பாய்ந்தவுடன் சூரன் மயிலாகவும், சேவலாகவும் மாறினான்.

மயிலை தனக்கு வாகனமாகவும், சேவலை கொடியாகவும் மாற்றிக் கொண்டு பகைவனுக்கும் அருளாசி வழங்கியவன் முருகன்.

அப்படிப்பட்ட முருகன் தோன்றிய வரலாற்றை சற்றுப் பார்ப்போம்…..

சூரபத்மன் என்பவன் சிவபெருமானை நினைத்து பல்லாயிரக்கணக்கான வருடங்கள் யாகங்கள் வளர்த்து, மனதை ஒரு முகப்படுத்தி தவம் செய்தபோது….

சூரபத்மனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் நேரில் தோன்றி வரம் அருளினார்.

அவ்வாறு வரம் கொடுக்கும் போது அழியாத தேகத்தையும், இந்திர ஞானத்தையும், 1008 அண்டங்களையும் ,108 யுகங்களையும் ஆளக்கூடிய வல்லமையை அளித்து!

தனது சக்தியால் அன்றி பிற சக்தியால் அழிவில்லை என்ற அனுக்கிரகம் செய்தார்.

எல்லா சிறப்புகளையும் பெற்ற சூரபத்மன். பெற்ற வரத்தின் சிறப்பினால் அகந்தை கொண்டு. தானே! சிறந்தவன் என்ற மமதையில் தேவர்களையும், மூவர்களையும் இந்திராணியையும் சிறைசெய்ய முற்படுகிறான்.

இறைவழியில் பெற்ற வரத்தை நல்வழிப் படுத்தாமல் தீய வழியில் பயன்படுத்திய காரணத்தினால் அழிவைத் தானே தேடிக் கொண்டான்.

பிரம்மா, விஷ்ணு, தேவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க சிவபெருமான்
1-ஈசானம்
2-வாமதேவம்
3-ஆகோரம்
4-சக்தியோ ஜாய்தம் 5-தர்பூருடம்
என்ற ஐந்து முகத்துடன் அடியவர்களுக்கு அருள் கொடுக்கும் கீழ்நோக்கு பார்வையுடன் கூடிய ஆறாவது முகத்தையும் இணைத்து ஆறுமுகங்களில் இருந்து அனல் பொறி பிறக்கச் செய்தார்.

” அனலில் பிறந்து புனலில் வளர்ந்து” உருவாகிய காரணத்தினால் “கந்தன்” என்று பெயர் பெற்றார்.

“ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப் பட்டதால்” “கார்த்திகேயன்” என்ற பெயர் பெற்றார்.

“ஆறுமுகங்கள் இருப்பதால்” “ஆறுமுகம்” என பெயர் பெற்றதுடன் ஆறுபடை வீட்டையும் கொண்டவர் முருகன்.

ஆறுபடை வீட்டையும் ஒவ்வொன்றாகப் பார்த்து பரவசம் கொள்வோம்.

முதல் படை வீடு:- திருப்பரங்குன்றம் “திரு”வாகிய பரம் பொருளாக காட்சி தந்த இடம் திருப்பரங்குன்றம்.

மணாளனாக திருமண கோலத்தில் காட்சி தரும் திருத்தலம் ‘ஆல்’ போல் செழிக்கும் இடமாகும்.

திருப்பரங்குன்றத்தில்” ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியாக” முருகன் காட்சி தந்து அருள் புரிகிறார்.

இரண்டாம் படை வீடு:-
திருச்செந்தூர்
சிவனின் வெப்பத்தால் பிறந்ததை ஒளி வடிவாக காட்டும் தலமே திருச்செந்தூர்.

“(திரு”வா)கிய முருகன் ஊரில் உள்ள மக்களுக்கு எல்லாம் அணுவாக அருள் மழை பொழியும் இடம் திருச்செந்தூர் ஆகும்.

சூரனாகிய இருட்டை வதம் செய்ய சூரியன் போன்ற ஒளிமயமான முருகன் போர் செய்து. ஊர் மக்களுக்கு எல்லாம் வெற்றி வாகையுடன் காட்சி தந்த திருத்தலமாகும்.

மலை தோரும் இருந்த முருகன் கடலலை போல் ஓயாது வரும் பக்தர்களுக்கு அருள் ஒளி வீசிக்கொண்டு இருக்கும் திருத்தளத்தில்
“ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி” யாக காட்சி தருகிறார்.

மூன்றாம் படை வீடு:- பழனி மலை
பழத்திற்காக ஆண்டியின் கோலத்திற்கு நிற்கும் மலை. பழம் + நீ =பழநி என்றால், “வித்து” தமிழுக்கு வித்தாகிய ஞானக்கடவுள் முருகன்.

பந்தம், பாசம், உறவு, பகை இவற்றிற்கு அப்பாற்பட்டவன் பழனி மலை முருகன். “பழனி ஆண்டவர்” என அழைக்கப்படுகிறார்.

நான்காம் படை வீடு:-
சுவாமிமலை
சுவாமி என்றாலே தன்னை விட மேலானவர்களை குறிப்பதாகும்.

தகப்பன் சாமியான சிவனுக்கு குருவாகி ‘ஓம்’ என்ற மந்திரத்திற்கு பொருள் சொன்னவர் சுவாமிமலை முருகன்.

குரு ஸ்தானத்தில் முருகனும் சீடர் தானத்தில் சிவனும் அமர்ந்து இருக்கும் மலையே சுவாமி மலை.

மரம் நீண்ட நாட்கள் நிலையாக நிற்க வேண்டும் என்றால் வேர்கள் ஆழமாக வலுவாக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட வேராக தமிழுக்கு நிற்பவனே முருகன். என்ற அரிய தத்துவத்தை உள்நிறுத்தி மலையே இல்லாத திருத்தலத்தில் காட்சி தந்து அருளை அள்ளித் தருபவனே ஸ்ரீ சுவாமிநாத சுவாமி .

ஐந்தாம் படை வீடு:- திருத்தணிகை திருவாகிய முருகன் தனது மனைவிகளுடன் காட்சி தந்து தன்னை வணங்க வரும் பக்தர்களை ஆய்வு செய்து கண்காணிக்கும் இடமே திருத்தணிகையாகும்.

‘தணிக்கை ‘என்பது மனிதர்கள் செய்யும் ஆய்வு. ‘தணிகை’ இறைவன் பக்தர்களுக்கு செய்யும் ஆய்வாகும்.

உயிர் எழுத்துக்கள் ஆகிய ஆயுத எழுத்துப் போன்று மூன்று பேரும் அமர்ந்து தனது பக்தர்களில் சிறந்தவர்களுக்கு அருளை வழங்கும் இடமாக திருத்தணிகையில் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி யாக காட்சி தந்த அருள்கிறார் முருகன்.


ஆறாம் படை வீடு;- பழமுதிர்ச்சோலை. சோலையில் தோன்றிய மரமே முருகன்.

பழம் எனும் கரு வளர்ந்து மரமாகி பூத்துக் குலுங்கி முதிர்ந்து பலமுதிர்ச்சோலை ஆகிறது.

பழம் + சோலை= பழமுதிர்சோலையாக காட்சி தரும் திருத்தலமே பழமுதிர்ச்சோலை.

முதிர்ச்சி பெரும்போது மனம் சார்ந்த நிலையில் இருக்கும். தன்னைக் காண வரும் பக்தர்களுக்கும் சாந்த நிலை கொடுக்கும் வகையில் வள்ளி, தெய்வானையுடன் ஸ்ரீ சோலைமலை முருகனாக காட்சி தருகிறார்.

” உண்டி சுருக்கி உயிர் வளர்ப்பீர்” என்பது ஆன்றோர் வாக்கு.

இவற்றை எப்படி கடைபிடிப்பது என்றால்… விரதங்கள் மூலம் எளிதாக கடைபிடிக்கலாம். மனம், பொறிவழி போகாமல் தடுக்கும் பொருட்டு உணவை சுருக்க வேண்டும். மனம், வாக்கு, காயத்தால் இறைவனை வழிபடுவதே விரதமாகும்.

உபவாசம் இருக்கும் போது உணவு உட்கொள்ளாமல் இருப்பதால் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது.

மனதால் இறைவனை நாடுவதால் மனத் தெளிவும், அமைதியும் கிடைக்கிறது.

உடலுக்கும், மனதிற்கும் ஆற்றல் கொடுப்பதே விரதங்களும், உபவாசங்களும்.

அப்படிப்பட்ட உபவாசத்தை கந்த சஷ்டி நாளில் ஐப்பசி மாதம் சுக்கில பட்சம் பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதம் இருந்து முருகனின் அருளைப் பெற உகந்த நாட்களாகும்.

முருகனின் கவசமாகிய “கந்த சஷ்டி கவசத்தை” முடித்த நேரங்களில் படித்து வந்தால் முருகனின் கடைக்கண் பார்வை நம் மேல் பட வாய்புண்டு.

தீயவர்கள் ஒதுங்குவர். நல்லவர் நட்பு நாளும் வளரும் .எனவே, முருகனின் அருளையும், அன்பையும் பெற காலை, மாலை நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தைப் படித்து முருகனின் பாதகமலத்தைப் பணிந்து அருள் கடாட்சம் பெறுவோம்.

Share.

Leave A Reply