கேசவா / ஞானத்தைப் பெறுவதற்கு சிரத்தையும், ஒருமைப்பாடும் அவசியம் என்றீர்கள் அதனை விவரித்துக் கூறுங்கள் என்கிறான் அர்ஜுனன் ,

   அர்ஜுனா/ சாதகனுடைய சாதனையினால் ஒருமைப்பாடு குறைந்திருந்தால் காரியம் நிறைவேறாது. அப்பொழுது அவர்கள் தமது சாதனையில் ஒருமைப்பாடு அற்ற குறையைக் கவனியாது சிரத்தையுடன் இருந்தும் பகவானை அடைய முடியவில்லையே என்று நினைப்பார்கள் .

   இப்படி நினைப்பது தவறு.சாதனையில் எவ்வளவு  சிரத்தை உள்ளதோ ,அவ்வளவுதான் அதில் ஒன்றிய தன்மையும் இருக்கும்.

   ஒருவன் பணத்திற்கு  ஆசைப்படுகிறான், வியாபாரம் செய்கிறான்,வியாபாரத்தால் செல்வம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உண்பது ,உறங்குவது,ஓய்வெடுப்பது எல்லாம் துறந்து பணம் ஈட்டுவது ஒன்றே குறியாக…..கஷ்டங்களைக் கஷ்டமாகவே நினைக்காமல் செயல்படுபோது செல்வம் பெருகுவதால் மனதில் திருப்தி அடைகிறான் .

   அது போல ஒளிமயமான பரமாத்மாவை அடைவதற்கு நேரடி உபாயமான பரமாத்ம தத்வஞானத்திலும் அதன் சாதனையில், சிரத்தையும் நம்பிக்கையும் உண்டான பிறகுதான் அதில் ஒருமைப்பாடும் ஏற்படுவது இயல்பாகும்.

   சாதனை புரிவதில் ஒருமைப்பாடு குறைவாக  இருந்தால்  சிரத்தையும், நம்பிக்கையும் குறைவு என்று அறிய வேண்டும் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .

   மேலும் கூறுகிறார்  அர்ஜுனா/விவேகமற்றவனும், சிரத்தை இல்லாதவனுமான சந்தேகம் உடையவன் பகவத் விசயத்தில்  தத்வஞானம்  பெறாமல் வீணாக அழிவான் .

   இந்த சந்தேகம் உடையவனுக்கு இவ்வுலகமும், மேலோகமும் சுகம் தராது,ஏனெனில் உண்மை எது? போய் எது ? ஆத்மா எது?அநாத்மா எதை செய்யலாம், எதை செய்யக் கூடாது என்ற முடிவுக்கு வர இயலாத விவேகம் அற்ற நிலையில் இருப்பான் .

   சிரத்தையும், முழுமையான ஈடுபாடும் ஏற்பட்டு விட்டால் பாவங்கள் அழிந்து உலகியல் போகங்களில் வைராக்கியம் ஏற்பட்டு மனமுடன் கூடிய புலன்கள் தாமாகவே அடங்கிவிடும்.பரமாத்மாவின் உண்மை அறிவும் ஏற்பட்டுவிடும் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .

   கேசவா, சந்தேகம் உடையவனுக்கு இவ்வுலகமில்லை. பரலோகமும் இல்லை. சுகமும் இல்லை சொல்வதன் பொருளை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .

   அர்ஜுனா/ ஈஸ்வரனை அடையும் உபாயம் சாஸ்திரங்கள்   ,பெரியோர்கள் அவர்கள் கூறும் அறிவுரைகள், அவற்றினால் ஏற்படும் பயன், இவற்றில் நிச்சயமற்றவன் .

   எதிலும் நிரந்தரப் புத்தியில்லாமல் சந்தேகப்பிராணியாய் பகவத் விசயத்தின் தத்வஞானம்  பெறாமல் அழிவான் .

   வேதங்கள், சாஸ்திரங்கள், பெரியோர்கள் சொல்வதிலும், அவர்கள் கூறும் சாதனங்களிலும், சரியான அறிவு ஏற்படாத காரணத்தாலும் ஒவ்வொரு விசயத்திலும் சந்தேகப்பட்டுக் கொண்டே  இருப்பான்.

   எதைச் செய்வது என்று புரியாமல் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்வான்.அதனால்தான் பெற வேண்டிய நன்மைகளை இழப்பான் .

   ஆனால், ஒவ்வொன்றையும் பகுத்தறிவும் சக்தி படைத்தவனோ அல்லதுவேதம், சாஸ்திரம், பெரியோர்களிடத்தும் நம்பிக்கை கொண்டவன் சீரழியமாட்டான். மாறாக பெரியோர்களின் உதவியால் உன்னைப் போன்று சந்தேகங்களைக் கேட்டுப் போக்கிக் கொண்டு கடமைகளை ஆற்றுவதில் பூரணமாக ஈடுபடுவான் .’

   செய்ய வேண்டியதைச் செய்த நிம்மதியுடன் மனிதப்பிறவி  பெற்ற பயனை அடைவான் .விவேகம் இல்லாதவனுக்கு சிரத்தை மட்டும் இருந்தாலும் போதும்.

   அந்த சிரத்தையினால்  பெரியோர்கள் சொன்னபடி கேட்டு சந்தேகங்களை  விளக்கி சாதனைகளில் ஈடுபடுவான். அவனுக்கு அவர்களுடைய அருளினால் மங்களம் உண்டாகும்.எனவே மனிதன் விவேகத்தினாலும் ,நம்பிக்கையினாலும்  சந்தேகத்தை அறவே ஒழிக்க வேண்டும்  என விவரிக்கிறார் கிருஷ்ணன் .

   மேலும் கூறுகிறார் , அர்ஜுனா/ கர்மயோக முறைப்படி கர்மங்கள் அனைத்தையும் நிறைவேற்றிப் பரமாத்மாவிடம்  அர்ப்பணம்  செய்து விடு .

   விவேக ஞானத்தினால்  சந்தேகங்களைப் போக்கிக் கொண்டு மனதைத் தன்வசமாக்கிக் கொண்டு விட்டவனைக் கர்மங்கள் கட்டுப்படுத்துவது  இல்லை என்கிறார் கிருஷ்ணன்.

   கேசவா/ கர்மங்களை தியாகம் செய்பவன் என்று பொருள் கொண்டால் என்ன தவறு? எனக் கேட்கிறான் அர்ஜுனன் .

   அர்ஜுனா/ கர்மங்களைச் செய்யாமல் தியாகம் செய்பவன் என்று பொருள் கொள்ளக்கூடாது .

   கர்மயோக முறையில் எல்லாக் கடமைகளையும் ஆற்றி அவற்றில் பயனில் விருப்பம், மமகாரம், பற்று, ஆசை இவற்றை அறவே துறந்து பகவானுக்கு அர்ப்பணம் செய்துவிடும் தியாகியைத்தான் குறிப்பிடுகிறேன்

   கேசவா/ விவேக ஞானத்தினால் எல்லா சந்தேகங்களையும்  அழிப்பது  என்பதன் பொருளை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் ..

   அர்ஜுனா/ ஈசுவரன் இருக்கிறாரா ?இல்லையா? எங்கே இருக்கிறார்? பரலோகம் என்பது உண்டா? இல்லையா ? இருந்தால் எப்படி இருக்கும் ? எங்கே இருக்கிறது? உடல் மனம், புத்தி புலன்கள் இவையெல்லாம் ஆன்மாவா? இல்லை வேறா? இப்படி ஒன்றுக்கும் வினா எழுப்பி விவேக ஞானத்தின் மூலம் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு  வருவது சந்தேகம் இல்லாமல் இருப்பது என விவரித்த கிருஷ்ணன் .

   பரதகுல தோன்றலே அர்ஜுனா/ நீ உள்ளத்தில் இருக்கும் அஞ்ஞானத்தில்  உண்டான உன்னுடைய இந்த சந்தேகத்தை விவேகஞானம்  என்ற வாளினால் சிதைத்து சமத்வயோகம்  என்ற கர்மயோகத்தில் நிலைத்து நில் .மேலும் யுத்தத்திற்கு எழுந்திரு/ என ஆணையிடுகிறார் .

   மேலும் அர்ஜுனா,/”நீயும் கர்மயோகத்தில் நிலைபெறுவாய்”என உற்சாகப்படுத்துகிறார்.’பரதா’ என்று அழைத்து ராஜரிஷியான பரதன் வரலாற்றை  நினைவுப் படுத்தி, அவர் குலத்தில் பிறந்த நீ வீர, தீர தைரியத்துடன் கடமை ஆற்று என அறிவுறுத்துகிறார்.

  அர்ஜுனா/ நீ என்னுடைய பக்தன், நண்பன், பிறர் உள்ளத்தில் சந்தேகம் இருந்தால் தீர்த்து  வைக்க வேண்டிய நீ எப்படி சந்தேகப்படுவது அழகன்று .

   அப்படிப் பிறர் சந்தேகத்தைத் தீர்க்க முடியாவிட்டாலும் உன்னுடைய சந்தேகத்தையாவது தீர்த்துக் கொள்ளலாமே/ என்றுதான் கூறினேன்  என்கிறார் கிருஷ்ணன் .

   கேசவா/ யோகத்தில் நிலைத்து நில் யுத்தத்திற்காக எழுந்திரு என்று கூறியதன் கருத்தைக் கூறுங்கள் என்கிறான் அர்ஜுனன்.

   அர்ஜுனா/ நான் சொல்வதெல்லாம் உன்னுடைய நன்மைக்காகத்தான் .ஆகவே ,அதில் சந்தேகம் கொள்ளாமல் நான் சொல்கிறபடி கர்மயோகத்தில் நிலைத்து நின்று, யுத்தத்திற்கு  தயார் ஆவாயாக. அதனால் உனக்கு எல்லா விதத்திலும் மங்களம் உண்டாகும் என்று  இந்த அத்யாயத்திற்கு முடிவுரை போன்று சொல்கிறார் கிருஷ்ணன் .

   நான்காவது அத்தியாயம் நிறைவுற்றது.

Share.

Leave A Reply