கேசவா! போர் புரிவாயாக என்று கூறியதன் கருத்தை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! சத்ரியனான நீ யுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. தர்மயுத்தம் என்பது சத்ரியனுடைய வர்ண தர்மம்.

ஒவ்வொரு மனிதனும், தனது வர்ணாசிரம் தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும். செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்ய வேண்டும்.

எனவே, பகவானை சிந்திப்பதும், கடமைகளை ஆற்றுவதும் தலையாய கடமை என்பதைச் சுட்டிக்காட்டவே போர் புரிவாயாக என்று கூறினேன் என்கிறார் கிருஷ்ணன்.

கேசவா! பகவானை இடைவிடாது சிந்திப்பதும் யுத்தம் முதலிய வர்ண தர்மங்களைக் கடைப் பிடிப்பதும் ஒரே நேரத்தில் எப்படி முடியும் என்கிறான் அர்ச்சுனன். 

அர்ச்சுனா! முடியும். வண்டி ஓட்டுநர் முழுக் கவனத்தோடு ஓட்டிக் கொண்டே பிறருடன் பேச்சுக் கொடுத்தாலும் விபத்தைத் தவிர்ப்பதற்காகவும், அதே சமயம் போகும் வழியிலும் கவனம் செலுத்துகிறாரோ அதேபோல பகவானை நினைத்துக் கொண்டே வர்ணாசிரம தர்மங்களையும் நல்ல முறையில் ஆற்ற முடியும் என்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! பகவானை தியானிப்பது என்ற பயிற்சியான யோகத்தில் ஈடுபட்டு வேறு விசயங்கள் பால் செல்லாத மனதினால் பகவானையே சிந்தித்திருக்கும் மனிதன், மிகவும் உயர்ந்த ஒளி பொருந்திய தெய்வீகமான மனிதன். அவன் பரமேஸ்வரனையே அடைகிறான். இது நியதி என்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா!எந்த மனிதன் எல்லாம் அறிந்தவரும், தொன்மையான வரும், எல்லாவற்றையும் ஆள்பவரும்,நுண்ணியதை காட்டிலும் மிகவும் நுண்ணியவர் அனைவரும் எல்லாவற்றையும் தாங்கிக் காப்பாற்றுபவரும்…

சிந்தனைக் கெட்டாத வடிவுடைய வரும், சூரியனைப் போன்று எப்பொழுதும் பிரகாச வடிவமானவரும் சத், சித்,ஆனந்த மயமான பரமேஸ்வரனையே நினைக்கிறான் என்றவர்,

பக்தியோடு கூடிய அந்த மனிதன் இறக்கும் தருவாயிலும் யோகத்தின் வலிமையால் புருவங்களின் மத்தியில் பிராணனை நன்றாக நிலை நிறுத்துகிறான்.

அசையாத மனதால் நினைத்துக் கொண்டு அந்த திவ்ய ரூபத்தோடு கூடிய மேலான புருசனான பரமாத்மாவையே அடைகிறான். 

அர்ச்சுனா! வேதம் அறிந்த வித்வான்கள் எந்த சத், சித்,ஆனந்த மயமான பரமபதத்தைப் பற்றிய அறிவு கிடைக்குமோ அதை வேதம் என்பார்கள்.

பற்று நீங்கிய சன்யாசிகள், மகாபுருசர்கள் எதில் புகுகிறார்களோ எந்த பரமபதத்தை விரும்புகின்ற பிரம்மச்சாரிகள். பிரம்மச்சாரிய நெறியை கடைப்பிடிக்கிறார்களோ, அந்தப் பரமபதத்தைப் பற்றி உனக்குச் சுருக்கமாகக் கூறப்போகிறேன் என்கிறார் கிருஷ்ணன். 

Share.

Leave A Reply