கிருஷ்ணரின் கீதை
கவிஞர் ச.மல்லிகா
ஞான யோகம் -தொடர்ச்சி
————–
கேசவா , பற்று அழியாமல் ,புலன்கள் அடங்காமல் இருந்தால் என்ன கேடு விளையும் என்பதை விளக்குங்களேன் என கேட்கிறான் அர்ஜுனன் .
”அர்ஜுனா ” மனிதனுக்கு போகங்களில் பற்று உள்ளவரை, அதன் காரணமாக அவனுடைய புலன்கள், அவனைப் பலவந்தமாக போகங்களில் ஈடுபடுத்துகிறது .
அதனால், அவனுடைய மனத்துடன் சேர்ந்த புத்தி பரமாத்மாவின் நினைவில் திடமாக இருக்க முடிவதில்லை.
புத்தியோகியாக விரும்புகிறவன் , முதலில் பற்றை அறவே ஒழிக்க வேண்டும்.பிறகு புலன்களைத் தன் வசத்தில் வைத்துக் கொள்ளத் தீவிர முயற்சி செய்ய வேண்டும்.
பின்பு, எல்லாப் புலன்களையும் தன் வசத்தில் வைத்துக் கொண்டு மனிதன் மனதை அடக்கி என்னையே பற்றிக் கொண்டு தியானத்தில் நிலைத்து இருக்க வேண்டும் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.
மேலும் கூறுகிறார் அனைத்துப் புலன்களையும் வசப்படுத்தி ஒரு முகப்படுத்த சித்தமுடையவன் என்னையே பரமகதியாகக் கொண்டு தியானத்தில் அமர வேண்டும்.
ஏனெனில் எவனுடைய புலன்கள் வசப்பட்டு இருக்கின்றனவோ அவனுடைய புத்தி திடமாகும்.இல்லையென்றால் , புலன்நுகர் பொருட்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற மனிதனுக்கு அவ்விசயங்களில் பற்று ஏற்படுகிறது.
பற்றுதலிலிருந்து ஆசை உண்டாகிறது.ஆசையிலிருந்து இடையூறு வருவதால் கோபம் உண்டாகிறது. இதைத்தான் ‘ஆசையினால் கோபம்’ ,விரோதம் உண்டாகும் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .
மேலும் விவரிக்கிறார், கோபத்தினால் மிகுந்த அறிவின்மை ஏற்படுவதால் ,நினைவுத்தடுமாற்றம்உண்டாகும்.நினவு தடுமாறுவதால் ,விவேகமாக செயல்பட முடிவதில்லை. விவேகமாக செயல்பட முடியாததால் மனிதன் தன் நிலையிலிருந்து வீழ்ச்சி அடைகிறான்.அதாவது, புத்தி மயங்கியவன் செய்ய வேண்டியதைச் செய்யாமல் செய்யத்தகாததைச் செய்ய முனைவான்.
அவனுடைய நடத்தையில் கசப்பு, கடுமை, கோழைத்தனம், இம்சை பழிவாங்குதல், இயலாமை, மெத்தனம், மூடத்தனம் ,போன்ற குறைபாடுகள் நேர்கின்றன .இப்படி நேர்வதால் அவன் வாழும் போது கடமையை செய்ய தவறுகிறான். கடமை செய்யாமையால் பிறவி துன்பத்தில் வீழ்கிறான் என்கிறார் கிருஷ்ணன் .
‘‘கேசவா, புலன்கள் கட்டுப்படாமல் நடந்தால் மனிதன் வீழ்ச்சி அடைகிறான் என விவரித்தீர்கள் .புலன்கள் கட்டுப்பாட்டில் நடப்பவர்கள் அடையும் பலன்களையும் எடுத்துச் சொல்லுங்கள்”என கேட்கிறான் அர்ஜுனன்.
அர்ஜுனா, சொல்கிறேன், என்ற கிருஷ்ணன் சொல்ல ஆரம்பித்தார்.
தன் வசப்பட்ட மனதுடைய மனிதன், விருப்பு வெறுப்புகளின்றித் தன்னால் வசப்படுத்தப்பட்டுவிட்ட புலன்கள் மூலம் போக விசயங்களில் சஞ்சரித்துக் கொண்டு உள்ளத் தெளிவை அடைகிறான் என்றவர் மேலும் கூறுகிறார்.
அர்ஜுனா, சாதாரண மனிதனுடைய புலன்கள் சுதந்திரமானவை அவை, அவனுக்குக் கட்டுப்பட்டவை அல்ல.
அவற்றில் விருப்பு வெறுப்புகள் நிறைந்து இருக்கின்றன.இதன் காரணமாக அந்தப் புலன்களுடைய போக்கில் போகங்களை அனுபவிப்பவன்..
இது சரியா ,சரியில்லையா என்று ஆராயாமல், எந்த வழியிலாவது போகப் பொருட்களை சேர்ப்பதிலும், அவற்றை அனுபவிப்பதிலும் ஈடுபடுகிறான் .
அந்த விருப்பு, வெறுப்பு காரணமாக இன்பத்தையும் துன்பத்தையும் அடைந்து கொண்டே இருக்கிறான் .அவனுக்கு ஆத்மானந்தம் கிட்டுவதில்லை . ஆனால்…..
புலக்கட்டுப்பாடு உள்ள மனிதனுக்கு அவனது புலன்கள் கட்டுப்பட்டிருக்கின்றன. அதனால் ,விருப்பு, வெறுப்புகள் கிடையாது.
இதன் காரணமாக அவன் தனது வர்ணம்,ஆசிரமம் சூழ்நிலை இவற்றிற்கேற்ப தன் தகுதியின் மூலமாகக் கிடைக்கும் சுகங்களில் விருப்பு, வெறுப்பின்றி வாழ்கின்றான் .
அவன் பார்ப்பது, கேட்பது, நடப்பது சுற்றுவது, தூங்குவது,விழித்திருப்பது முதலிய புலன்களின் எல்லாச் செயல்களும் கட்டுப்பாட்டுடனும், சாஸ்திர முறைப்படியும் அமையும்.
அவனுடைய எந்தச் செயலிலும் விருப்பு, வெறுப்பு, காமம் ,குரோதம், பேராசை ஆகியவை இருக்காது. இதைத்தான் ”தனக்கு வசப்பட்ட விருப்பு, வெறுப்பு அற்ற புலன்களைக் கொண்டு வாழ்வது” என விளக்குகிறார் கிருஷ்ணன்.
கேசவா, வெளிப்படையாகத் பொருட்களைத் துறப்பது, புலன்களை அடக்குவது, புலன்களிலிருந்தே விருப்பு, வெறுப்புகளை அகற்றுவது இம்மூன்று நிலைகளில் பகவானை அடைவதில் எந்தநிலை மிகவும் உதவுகிறது என்கிறான் அர்ஜுனன் .
அர்ஜுனா, இந்த மூன்று நிலைகளுமே, பகவானை அடைவதற்கு உதவுபவைதான்.வெளிப்படையாக பொருட்களைத் துறப்பதைக் காட்டிலும் புலன்களை அடக்குவது சிறந்தது.
புலன்களை அடக்குவதைக் காட்டிலும் புலன்களுடைய விருப்பு, வெறுப்புகளை அகற்றுவது பகவானை அடைவதற்கு மிகவும் உதவியாகவும், சிறந்ததாகவும் ஆகிறது.
சாஸ்திரங்களின் படிப்பு, ஆராய்ச்சி,இவற்றால் உலகியல் இன்பங்கள் நிலையில்லாதவை என்பது விளங்கிவிட்டால், பகவானுடைய அருளால் பஜனை , பூஜை, தியானம் முதலியவற்றாலும் விருப்பு, வெறுப்புகளை அழித்துவிட முடியும்.
இவ்வாறு ,ஒருவன் புலன்களில் விருப்பு, வெறுப்புகளை அழித்து விட்டால் வெளியில் உள்ள சுகங்களை துறப்பதும், புலன்களை அடக்குவதும் எளிதாகிவிடும்.
அதாவது, ஒருவனுக்கு போக விசயங்களில் விருப்பு, வெறுப்பு இல்லாமல் போய்விட்டால் அவன் வெளிப்படையாக போக விசயங்களைத் துறக்காமல் அவற்றில் ஈடுபட்டாலும் பரமாத்மாவை அடைந்து விடமுடியும்.
ஆகவே, புலன்கள் விருப்பு , வெறுப்பு அற்று இருப்பது, போக சுகங்களை துறப்பதைக் காட்டிலும் , புலன்களை அடக்குவதைக் காட்டிலும் சிறந்தது என்கிறார் கிருஷ்ணன் .
கீதை தொடரும்