கேசவா , சத்திரியர்களின்  குணமாக கருதப்படுவதை விவரியுங்கள் எனக் கேட்கிறான் அர்ஜுனன் .

அர்ஜுனா, யுத்தம் புரிவது , துஷ்டர்களைத் தண்டிப்பது முதலியவை சத்திரியர்களுடைய சுய தர்மமாகும் . அகிம்சை அமைதி முதலிய பண்புகள் குறைந்து காணப்படும் .

வைசிய தர்மமான வேளாண்மை முதலிய கடமைகளில் இம்சை முதலிய குறைகள் காணப்படுகின்றன. என விவரிக்கிறார் கிருஷ்ணன் .

கேசவா, தர்மத்தில் மரணமே  நேர்ந்தாலும் அதுமேன்மை தரும் என்பதை விவரியுங்கள் எனக் கேட்கிறான் அர்ஜுனன் .

அர்ஜுனா ,இடையூறுகள் வராமல் வாழ்நாள் முழுவதும் சுயதர்மத்தைக் கடைபிடித்தவன் தன் விருப்பப்படி  சுவர்கத்தையோ, மோட்சத்தையோ அடைவான் என்பதில் ஐயமில்லை .

இடையூறு  வந்தும் கூட அவன் சுயதர்மத்தில் இருந்து வழுவாமல் உறுதியாக இருந்து வந்தால் அவனுக்கு மரணமே ஏற்பட்டாலும் , அதுமேன்மையையே  தரும்.

இதிகாசங்களிலும் , புராணங்களிலும் இப்படி பல உதாரணங்கள்  கிடைக்கின்றன. சுயதர்மத்தைக் கைவிடாமல் கடைப்பிடித்து அதனால் மரணம் வரை கஷ்டங்களை ஏற்பவர்களுக்கு நற்கதி கிடைத்தது என்றெல்லாம் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன .

‘திலீபன் ‘என்ற அரசன் சத்ரிய தர்மத்தைக் கடைப்பிடித்து  ஒரு பசுவைக் காப்பதற்காகத்  தன் உடலை சிங்கத்திற்கு அர்ப்பணம் செய்ய முனைந்து தன் விருப்பத்தை அடைந்தான் .

‘சிபி’ என்ற அரசன் ”அடைக்கலம் புகுந்ததைக் காப்பது ”என்ற சுயதர்மத்தைக் கடைப்பிடித்து, ஒரு புறாவைக் காப்பதற்காக ….

புறாவைத் துரத்தி வந்த பருந்திற்கு  தன் உடலின் மாமிசத்தையே வெட்டிக் கொடுத்து இறப்பதற்கும் துணிந்தான். அதனால் ,அவனுக்கு மேன்மையே  கிடைத்தது .

பக்தி என்ற சுயதர்மத்தைக் காப்பதற்காக பிரகலாதன் மரணத்திற்கொப்பான  பல கொடுமைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றான் .அதனால் மேன்மையே கிடைத்தது .

காமத்தினாலோ, பயத்தினாலோ  பேராசையினாலோ, உயிரைக் காப்பதற்காகவோ , மனிதன் எக்காலத்திலும் சுயதர்மத்தை விடக்கூடாது .

ஏனெனில் தர்மம் நித்தியமானது.சுகமும், துக்கமும் நிலையற்றவை. ஜீவன் நித்யன் வாழ்வின் காரணம் அழியக்கூடியது .

ஆகவே , மரணபயம் வரும்போது கூட மனிதன் சிரித்துக் கொண்டே மரணத்தை வரவேற்க வேண்டும். ஆனால் சுயதர்மத்தை எக்காரணத்தைக்  கொண்டும் விடக்கூடாது.இதில்தான் அவனுடைய எல்லாவிதமான மேன்மைகளும் உள்ளன என விவரிக்கிறார் கிருஷ்ணன் .

கேசவா, மனிதன்  தான் விரும்பாவிட்டாலும் பலவந்தமாகத் தூண்டப்பட்டவன் போல் எதனால் ஏவப்பட்டுப் பாவத்தைச் செய்கிறான் என்பதை விவரியுங்கள்  எனக் கேட்கிறான் அர்ஜுனன் .

அர்ஜுனா, கவனத்துடன் முயற்சி செய்யும் புத்திசாலியான  மனிதனுடைய  மனதையும் கூடப் புலன்கள் வலுவில் தடுமாறச் செய்கின்றன.

உலகியலிலும் நாம் பார்க்கிறோம். புத்தியும், விவேகமும் உள்ளவன் நேரிடையாகவும், அனுமானத்தினாலும் பாவங்களால் விளையும் கேடுகளைப்  பார்த்து ஆராய்ந்து அவற்றில் ஈடுபடுவது தவறு என்று உணர்கிறான்.

ஆகவே, விருப்பத்துடன் பாவச் செயல்களில் இறங்குவதில்லை . ஆயினும் நோயாளி உடலுக்கு ஒவ்வாததைச் சபலம் காரணமாக உண்பதுபோல தானே அறியாமல் பாவச் செயலில் ஈடுபடுகிறான். மனிதனை வலுவில் பாவச் செயலில் ஈடுபடுத்துவது  யார் ?

பகவானே, மனிதர்களைப் பாவச் செயல்களில் தள்ளுகிறாரா?அதனால்தான் அவர்கள் அவற்றிலிருந்து மீள முடியவில்லையா ?அல்லது பிராப்தத்திற்குக் கட்டுப்பட்டு அவர்கள்  பாவம் செய்ய நேர்கின்றதா ? அல்லது வேறு காரணம் உண்டா?  என்பன  போன்ற கேள்விகளை கேட்கிறான் அர்ஜுனன் .

அர்ஜுனா, ராட்சஷ குணத்தில்  இருந்து  உண்டாகிய  இந்த காமம்தான் கோபமாகும். பெருந்தீனிக்காரன் , போகங்களில் ”போதும்” என்ற எண்ணம் இல்லாதவன்  பெரிய பாவி .இவைகளே மனிதனுக்கு பகைவன் என்பதை அறிந்து கொள் என்கிறார் கிருஷ்ணன் .

மேலும் கூறுகிறார், காமத்தில் இருந்துகுரோதம் உண்டாகிறது. காமம் அழிந்தால் அதனுடன் குரோதமும் அழிந்து விடும் .

பாவத்திற்குக் காரணம் காமம் மட்டும்தான் .குரோதம் இல்லை என யாரும் எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவே தொடக்கத்திலேயே ரஜேகுணங்களாக காம, குரோதம் என  சொல்லப்பட்டது என்கிறார் கிருஷ்ணன் .

கேசவா, பெருந்தீனிக்காரன் என்று சொல்வதன் கருத்தை விவரியுங்கள்  என்கிறான் அர்ஜுனன்

அர்ஜுனா , சுகபோகங்களை அனுபவிக்க அனுபவிக்கக் காமம் பெருகுகிறதே  தவிர ‘போதும்’ என்று ஓய்வதில்லை .

நெய்யும், விறகும் சேரச் சேரச்  தீ வளர்வது போல மனிதன் போகங்களை எவ்வாறு அதிகமாக அனுபவித்தாலும் மேலும் , மேலும் அதிகமாக போகங்களில்  பேராசை உண்டாகிவிடுகிறது .

ஆகவே, போகங்களாகிற   ஆசையைக் காட்டி, சாம, தான நீதி முறைகளால் காமம் என்ற எதிரியை வெற்றி  கொள்ளலாம் என்று ஒரு போதும் நினைக்க வேண்டாம்.

‘தண்ட’ நீதியையே இதற்கு உபயோகிக்க வேண்டும் .

எல்லா தீமைகளுக்கும் காரணம் இந்த காமம் தான். மனிதனுடைய விருப்பம் இல்லாமலே அவனைப் பாவச் செயல்களில் ஈடுபடுத்துவது பிராப்தமோ , ஈசுவரனோ அல்ல.

காமம்தான் பலவிதமான நுகர்ச்சிகளில் பற்றுதலை உண்டாக்கி அவனைப் பலவந்தமாகப் பாவங்களில் ஈடுபடச் செய்கிறது .ஆகவேதான் காமம் மகாபாவி எனப்படுகிறது என்றவர் மேலும் கூறுகிறார் .

எவ்விதம் புகையால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும் மறைக்கப்படுகின்றன .கருப்பையில் தசை மூட்டத்தினால் கரு மறைக்கப்படுகிறதோ  அவ்விதமே அந்தக் காமத்தினால் இந்த ஞானம் மறைக்கப்படுகிறது.

அதாவது , புகையானது மன தடுமாற்றத்தைக் குறிக்கிறது.புகை இங்குமங்கும்   சூழ்ந்து கொண்டே தீகொழுந்தை மறைத்து விடுகிறது .

அது போலவே, ‘தடுமாற்றம்’ சஞ்சலமாக இருந்து கொண்டே அறிவைமழுங்கச் செய்கிறது.

மனம் ஒரு முனைப்போடு  இல்லாவிட்டால் அறிவு பிரகாசிக்காது .மழுங்கிவிடும்  கண்ணாடியின் மேலே அழுக்குப் படிவதால் பிரதி பிம்பம்  அதில் தெரிவதில்லை .

அது போல பாவங்களால் அந்தக் காரணத்தில் அழுக்குப் பிடித்திட்டால் அந்த மனதில் உண்மையும் உறைவதில்லை .செய்ய வேண்டிய கடமைகளும் நன்றாகப் புரிவதில்லை அதனால் மனிதன் தெளிவாக ஆலோசிக்க முடிவதில்லை .

தசை மூட்டம் என்ற  தசைத்திரை மூடிக் கொண்டிருக்கிறது .அதில் கருப்பொருளைச் சிறிது கூட காண முடிவதில்லை .

அதுபோல ஆவரணம்  என்ற திரை  அறிவை மூடி விடுகிறது. அஞ்ஞானத்தினால்  மோகமடைந்த உள்ளம் கொண்டவன் தூக்கம் சோம்பல் போன்ற  சுகத்  தோற்றங்களில் வீழ்ந்து எதையும் ஆராய்வதில்லை .

இந்த காமம் மனிதனுடைய உள்ளத்தில் பலவித போகங்களில் பேராசையை வளர்த்து அவன் மனதைத் தடுமாற  வைக்கிறது.

பலவிதமான பாவச் செயல்களைச்  செய்யத் தூண்டி மனதில் அழுக்கைச் சேர்க்கிறது .

துக்கம், சோம்பல், செயல் ஒழுக்கமின்மை இவையே சுகம் என்று மதியை மயக்கி அவனை  விவேகமற்றவனாக  ஆக்கி விடுகிறது .இவ்வாறு மூன்று விதமாக காமம் அறிவை மறைத்து விடுகிறது என விவரிக்கிறார் .

அர்ஜுனா,  திருப்தி அடையாத நெருப்பைப் போன்றது காமம் .இந்த காமத்தினால்; மனிதனுடைய ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறது .

Share.

Leave A Reply