பகுதி – 48 ஞான கர்ம சன்யாச யோகம்   

கேசவா, தங்களை பக்தர்கள்  எவ்விதம் வேண்டுகிறார்களோ அவ்விதமே  அருள் புரிகிறேன் என்பதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் ,   

அர்ஜுனா, பக்தர்கள் என்னை வழிபடுவதில் பல வகை உண்டு  விஷ்ணுவாக ,ராமராக, கிருஷ்ணராக , சிவபெருமானாக  , தேவியாக  உருவம் அற்ற  நிலையிலும், எங்கும் நிறைந்த பரம்  பொருளாக இப்படி எந்த நிலையில் என்னை வழிபட்டாலும்  அதே நிலையில் தரிசனம் அளித்து அவர்களைக்  கரையேற்றுகிறேன். 

என்னை குழந்தையாக எண்ணும் அன்னை யசோதைக்கு  குழந்தையாகிறேன் .தோழமையுடன் தோழனாகிறேன். ருக்மணியைப் போல் என்னைக் கணவனாக பாவிப்பவர்களுக்கு  கணவனாகிறேன் .   அனுமான் போல் சேவை செய்பவர்களுக்கு சுவாமியாகவும் ,கோபியர்களுக்கு  காதலனாகவும், இப்படி அவர்கள் எண்ணம் போல் அருள் செய்கிறேன் என தனது தெய்வீக லீலைகளை விவரிக்கிறார் கிருஷ்ணன் .   

கேசவா, ”மனிதர்கள் எல்லாவிதத்திலும் என் வழியைஎ பின்பற்றுவார்கள்” என்று தாங்கள் கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன்.   

அர்ஜுனா , நான் அன்புடனும், நட்புணர்வுடனும் ,நடந்து கொண்டால் மக்கள் என்னைப் பின்பற்றுவார்கள்.   என்னைப் பார்த்துத் தன்னலமின்றி ஒருவர் மற்றொருவருடன் முறையாக அன்புடனும், நட்புணர்வுடனும் பழகுவார்கள் .   இந்த நீதியை  உலகில் பிரசாரம் செய்வதற்காக நான் இப்படி நடந்து கொள்வது கடமையாகிறது .உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத்தானே நான் அவதரிக்கிறேன்  என்கிறார் கிருஷ்ணன் . 

 கேசவா, அப்படி என்றால் பிறதேவதைகளை வழிபடுவது எதற்காக எனக் கேட்கிறான் அர்ஜுனன் . 

அர்ஜுனா, யாகம் முதலிய கர்மங்களினால் இந்திரன் முதலான தேவதைகளை  வணங்குவது  மனிதப் பிறவி பெற்றவர்களுக்கு மட்டும் தான் உண்டு . என்று கூறுகிறார் கிருஷ்ணன் .    கேசவா, கர்ம பயன்களை விரும்புவர்கள் சித்தி பயன் விரைவில் அடைவதற்கான தேவதைகளை வணங்குகிறார்கள்  என்பதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .   அர்ஜுனா, மனைவி மக்கள், செல்வம் வீடு,கெளரவம் , பெருமை என்ற ரீதியில் உலகியல் போகங்களை விரும்பி கர்ம பயனை விரும்புவதால் ஞான வாசனை மறைக்கப்பட்டு விடுகிறது .    

அதனால் என்னை வணங்காமல் தேவதைகளை வணங்கி உடன், பயன் கிடைக்க  விரும்புகிறார்கள்    தேவதைகளைப் பூஜை  செய்பவர்களுக்கு அவர்கள் செய்யும் கர்மங்களின்  பயன் உடனே கிடைக்கிறது .    தம்மை வணங்குபவர்களுக்கு தாம் அளிக்கும் போகங்கள் நன்மை தருமா? தீங்கு  விளைவிக்குமா  என்று சிந்திக்காமல் அவற்றை அளிப்பது தேவதைகளின் இயல்பு.   

நான் அப்படி செய்வதில்லை என்னுடைய பக்தர்களுக்கு உண்மையில் எது சரி? எது தவறு? என்பதை ஆலோசித்து பக்திக்குப் பயனை நானே நிர்ணயம் செய்வேன் .   எனது பக்தன் பயனில் பற்றுடன் என்னை பூஜித்தான் என்றால் அவனுடைய அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்வதும் உண்டு .   அப்படி பூர்த்தி செய்யும் போதே அவனுக்கு போகங்களில் சுவை அற்றுப் போகும் படியாக  செய்து அவற்றிற்கும்  மேலான ஆனந்தத்தைக் கொடுப்பேன்.   சிற்றின்பங்களில் ஆசை அற்ற வைராக்கியத்தை உண்டு பண்ணி என்னிடம் பிரமையையும், நம்பிக்கையும் அதிகப்படுத்துவேன் .   உலகியலில் ஊறிப்போன மக்களுக்கு என்னுடைய பக்தியின் பயன் விரைவில் கிடைப்பதாக தெரிவதில்லை .   

மந்தபுத்தி உடைய மக்கள் கர்மங்களின் பயன் உடனே கிடைக்க வேண்டுமென்று விரும்பி மற்ற தேவதைகளை வணங்கிக் கொண்டு  இருக்கிறார்கள்  என்கிறார் கிருஷ்ணன் . 

 கேசவா, குணகர்மம் என்பதையும், அதன்படி நான்கு பிரிவாக படைத்தேன் என்று தாங்கள் கூறியதையும், விவரித்துக் கூறுங்கள் என்கிறான் அர்ஜுனன் . 

 அர்ஜுனா, தொன்று தொட்டு மனிதர்கள் பல பிறவிகளில் கர்மம் செய்து கொண்டே இருக்கிறார்கள் .   அவர்களின் குணநலன்களுக்கு  தக்கப்படி கர்மங்களை விதிக்கிறேன்  , புலன் அடக்கம், மன அடக்கம் உள்ளவன் முதல் பிரிவாகவும், சூரவீரத்தனத்திற்கு ஏற்ற கர்மங்களை இரண்டாவது பிரிவாகவும்  உளவுத் தொழில், பசு பராமரிப்பு  மூன்றாம் பிரிவாகவும் சேவை செய்வதை நான்காம் பிரிவாகவும் அமைத்துக் கொடுக்கிறேன்.    இந்த ஏற்பாடு உலகில் சரிவர நடந்து வருகிறது. ஒரே வர்ணத்தில் பிறந்த ஆண், பெண்  சந்ததிகள் பிறந்து வளரும்போது  வர்ணம் சுத்தமாக இருக்கிறது .   வர்ணக்கலப்பு ஏற்படும் போது ஏற்ற, தாழ்வு  வாழ்வியல் பிரச்சினைகள் நடக்க ஏதுவாகிறது .   மனிதர்களை மட்டுமே மனதில் கொண்டு இந்த விபரம் சொல்லப்பட்டது.   

இதில் இருந்து தேவர்கள், பித்ருக்கள், விலங்குகள் போன்றவர்களுக்கு அவர் அவர்  குண அமைப்புகளுக்கு ஏற்ற வகையில் பிறவிகளை அமைக்கிறேன் .   எனவே, படைப்பு விசயத்தில் சார்போ, வஞ்சனையோ , கிடையாது , என்பதை உணர்த்துவதற்காகப் பிரிக்கப்பட்டதே வர்ணப் பிரிவு .   இது அவர் அவர் கர்ம குணங்களுக்கு ஏற்ற வகையில் அமைகிறது என்கிறார் கிருஷ்ணன் .   

கேசவா, பிராமணன் என்பவன் செயலைக் கண்டு கணிக்க வேண்டுமா  என்பதனை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் . 

 அர்ஜுனா, பிரம்மத்தை தேடுபவன் யாராக இருந்தாலும் அவனே பிராமணன்  எனப்படுகிறான் .   பிராமண குலத்தில் பிறந்தால் மட்டும் பிராமணன் என்ற உயரிய குணம் எல்லோரிடத்திலும் இருப்பதில்லை.   பிராமண வகுப்பில் பிறந்தவனாயினும் ,அவனுடைய செயல் பிராமணனுக்கு உரியதாக இல்லாவிட்டால் ஆன்மிக மேன்மை கிடைக்காது, என்கிறார் கிருஷ்ணன் .   கேசவா, ”உலகத்தைப் படைத்தல் முதலியன செயல்கள்  ஆனாலும் நான் கடவுள் அல்லன்” என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன்    அர்ஜுனா, இதன் மூலம் இறைவனுடைய செயல் தெய்வீகமானது என்று தெரிந்து கொள்ள  வேண்டும். அவருடைய செயலில் எந்த விருப்பு, வெறுப்போ கிடையாது .   

பகவான் எதிலும் சாராமல் அவரை ஒட்டாதிருக்கும் போது பகவானுடைய ஒரு சம்பந்தமும் இல்லை. ஞானி கூடக் கர்மங்களின் கர்த்தா அல்லர்.   கர்மங்களின் பயன்கள் அவரைஒட்டாதிருக்கும் போது பகவானுடைய செயல் முற்றிலும்  உலகியலுக்கு அப்பாற்பட்டது என்கிறார் கிருஷ்ணன் .   

‘கேசவா , கர்மங்கள் ஒட்டுவதென்பதும் பயன்களில் ஆசை கிடையாது. எனவே, ‘கர்மங்கள் ஒட்டா ‘ என்பதையும் விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .   

அர்ஜுனா ,கர்மம் செய்பவர்களின் உள்ளத்தில் பற்று, மமகாரம், பயனில் கருத்து, அகங்காரம் இவை இருப்பதால் சம்சாரங்களாக மனப்பதிவாகி உள்ளத்தில் உறைகின்றன .   அவற்றிற்கு ஏற்றாற்போல் மறுபிறவியும், புண்ய பாவங்களுக்கு உரியவனான சுகதுக்கங்கள் கிடைக்கின்றன .இவற்றைத்தான் கர்மம்  ஒட்டிக் கொள்கிறது என்கிறேன்.   கர்மங்களின் பயனாக ஏற்படும்  எந்தவிதமான போகங்களிலும் எனக்குப் பற்று இல்லை.. ஒரு பொருளையும் விரும்பவில்லை .மமகாரம், அகங்காரம், பயனில் கருத்து இவற்றிற்கு சம்பந்தமில்லை. எனது செயல்கள், தெய்வீகமானவை.ஆகவே அவை என்னை ஒட்டாது பந்தப்படுத்தாது  என விவரிக்கிறார் கிருஷ்ணன் .                                           (தொடரும்)

Share.

Leave A Reply